தண்டட்டி சினிமா விமர்சனம் : தண்டட்டி மறைக்கப்பட்ட தங்க பொண்ணுவின் அழகிய காதல் சின்னம் | ரேட்டிங்: 3.5/5

0
443

தண்டட்டி சினிமா விமர்சனம் : தண்டட்டி மறைக்கப்பட்ட தங்க பொண்ணுவின் அழகிய காதல் சின்னம் | ரேட்டிங்: 3.5/5

ராம் சங்கையா இயக்கத்தில் லக்ஷ்மன் குமார் தயாரித்த திரைப்படம் தண்டட்டி.
நடிகர்கள்:-
பசுபதி – சுப்பிரமணி
ரோகிணி – தங்கப்பொண்ணு
அம்மு அபிராமி – தங்கப்பொண்ணு (இளமை பருவம்)
விவேக் பிரசன்னா – சோ பாண்டி
முகேஷ் – செல்வராசு
தீபா சங்கர் – பொன்னாத்தா
பூவிதா – சின்னாத்தா
ஜானகி – பூவாத்தா
செம்மலர் அன்னம் – விருமாயி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
இயக்குநர் – ராம் சங்கையா
ஒளிப்பதிவாளர் – மகேஷ் முத்துசாமி
இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி
எடிட்டிங் – சிவா
பாடல்கள் – பட்டினத்தார், ஏகாதசி, ராம் சங்கையா
தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன் குமார்
மக்கள் தொடர்பு : ஜான்தேனி மாவட்டத்தில் உள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் தங்கப்பொண்ணு என்ற பெண்மணியின் கதை தண்டட்டி. ஒரு நாள் தங்க பொன்னின் பேரன் செல்வராசு நான்கு நாட்களாக காணாமல் போன தனது அப்பத்தா தங்கப்பொண்ணுவைக் (ரோகிணி) கண்டுபிடிக்க காவல் நிலையத்தில் புகார்  கொடுக்கிறார். ஆனால் அவரது புகாரை ஏற்க போலீசார் மறுக்கின்றனர். காரணம், அந்த ஊரில் மக்கள் எப்போதும் போலீசை அசிங்கப்படுத்தி அனுப்பிவிடுவார்கள். அதனால் கிடாரிபட்டி ஊரில் எந்தப் பிரச்சனை என்றாலும் போலீஸ் போகாது. அதே போல 4 பெண்கள் (பூவிதா, தீபா சங்கர், ஜானகி, செம்மலர் அன்னம்) வந்து தங்களது அம்மாவைக் காணோம் எனச் சொல்கிறார்கள். இவர்கள் அனைவரும் குறிப்பிடுவது ஒரு நபரைத்தான். நேர்மையும், கண்டிப்பானவராகவும் ஓய்வு பெறும் விளிம்பில் உள்ள காவலர் சுப்பிரமணி, சக காவலர்கள் எச்சரித்தும், புகார் அளித்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர் உணர்ந்து செல்வராசுவை உடன் அழைத்துக் கொண்டு காணாமல் போன தங்கப்பொண்ணுவை  தேடிக்கண்டு பிடிக்கிறார். பலவீனமாக நிலையில் இருந்த தங்கப்பொண்ணுவை மருத்துவமனையில் சேர்கிறார். ஆனால் தங்க பொண்ணு பரிதாபமாக இறந்து விடுகிறார். கிடாரிபட்டி கிராமத்திற்கு சென்றவுடன் அங்கு தங்கப்பொண்ணு தன் சுயநல மகள்கள் மற்றும் குடிகார மகனின் கைகளால் பல ஆண்டுகளாக அனுபவித்த கஷ்டங்களால் தனது கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்பதை சுப்ரமணி கண்டுபிடிக்கிறார். சவமாக இருக்கும் தங்கப்பொண்ணுவின் மறைவைப் பற்றி உறவினர்கள் கவலைப்படுவதற்கு பதிலாக,  தங்கப்பொண்ணு பல வருடங்களாக அணிந்திருந்த தண்டட்டியை அபகரிக்கும் நோக்கமாக இருக்கின்றனர். அன்றிரவே, ஆபரணம் காணாமல் போகிறது. இதனால் அவர்களது குடும்பத்தில் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது.  காணாமல் போன தன் அம்மாவை கண்டு பிடித்தது போல் காணாமல் போன தண்டட்டியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று தங்கப்பொண்ணுவின் மகன் சோ பாண்டி (விவேக் பிரசன்னா) காவலர் சுப்ரமணியை மிரட்டுகிறான். எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து தண்டட்டியை சுப்ரமணி கண்டுபிடித்தாரா? அவரது இறுதி சடங்குகள் அமைதியாக நடைபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஓய்வுபெறும் விளிம்பில் உள்ள காவலர் சுப்ரமணி கதாபாத்திரத்தில் பசுபதி தான் ஒரு சிறந்த யதார்த்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். முழு படத்தையும் தனது தோள்களில் சுமந்து கொண்டு கடமை உணர்வுள்ள காவலர் பாத்திரத்தை சிறப்பாக கையாண்டு படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
தங்க பொண்ணுவின் மையக் கதாபாத்திரத்தில் ரோகிணி, எப்போதும் போல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். மூச்சை அடக்கிக் கொண்டு சடலமாக நடிப்பது சிரமம். அதை கனகச்சிதமாக செய்துள்ளார்.
பேரன் செல்வராசுவாக முகேஷ், குடிகாரன் மகனாக விவேக் பிரசன்னா, தங்கப்பொண்ணு வின் மகளாக வரும் தீபா சங்கர் (பொன்னாத்தா), பூவிதா (சின்னாத்தா), ஜானகி (பூவாத்தா), செம்மலர் அன்னம் (விருமாயி) ஆகியோர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி கிடாரிபட்டி கிராமத்து மக்களாகவே வாழ்ந்துள்ளனர்.  அவர்களது கதாபாத்திரங்கள் நம்மை அவர்களின் உலகிற்கு கொண்டு செல்லும் அளவிற்கு சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடன் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகளும் சேர்ந்து தூள் கிளப்புகிறார்கள்.
பேசப்படும் முக்கியமான கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி சிறப்பாக நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தை பற்றி சொன்னால் கதையின் சுவாரஸ்யம் போய்விடும். அம்மு அபிராமியின் கதாபாத்திரத்தை பற்றி படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி கிராமத்து சடங்குகளையும், கிராமத்து மக்களையும் அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு பல்வேறு கோணங்களில் மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்.
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும், நேர்த்தியான சிவாவின் படத்தொகுப்பும் கிராமத்து கதைக்கு ஏற்ப சிறப்பாக அமைந்திருக்கிறது.தண்டட்டியை மையமாக வைத்து, அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை நேர்த்தியாக முன் வைக்க முயற்சிக்கிறார் இயக்குனர் ராம் சங்கய்யா. கடந்த காலத்தில் சாதிவெறி பெண்களுக்கு விருப்பமான ஒருவரை திருமணம் செய்யும் உரிமையை எப்படி மறுத்தது என்பதையும், பொய்யான கௌரவத்திற்காக தங்கள் குடும்பத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரைத் திருமணம் செய்யும்படி பெண்கள் எப்படி நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பதையும், கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய அவர்களிடமிருந்து பெறக்கூடிய சொத்துக்களைப் பற்றியும் கதையின் நம்பகத்தன்மையை சிதைக்காமல், குடும்ப உறவுகளின் சிக்கல், துக்க வீட்டில் நடக்கும் கலாட்டாக்கள், பிளாஷ்பேக், மற்றும் எதிர்பாராத க்ளைமேக்ஸ் என திரைக்கதை அமைத்து நகைச்சுவை கலந்து இளைய தலைமுறை தண்டட்டி குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராம் சங்கையா.

மொத்தத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரித்திருக்கும் தண்டட்டி மறைக்கப்பட்ட தங்க பொண்ணுவின் அழகிய காதல் சின்னம்.