‘கேம் என்றாலே பிரச்சினைதான்’ ; இமெயில் பட நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பேச்சு!

0
139

‘கேம் என்றாலே பிரச்சினைதான்’ ; இமெயில் பட நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பேச்சு!

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பல இன்னும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் படத்தின் இரண்டாவது நாயகன் ஆதவ் பாலாஜி பேசும்போது, “இன்று சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. சங்கத்தில் உறுப்பினராக ஆனாலும் கூட என்னை போன்றவர்களை ஒதுக்கி தான் பார்க்கிறார்கள். என்னுடைய முதல் படம் மெய் நன்றாக இருந்தும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்த படத்தில் தயாரிப்பாளராக இருந்து இயக்குநராகி இருக்கும் எஸ்.ஆர் ராஜன் இந்த படத்தின் கதை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறார். இவர் வெற்றி பெற்றால் இன்னும் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.

சமூக சொற்பொழிவாளர் முகிலன் பேசும்போது, “இந்த படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் சொல்லாடல்கள் சரியாக இருக்கின்றன. இந்த தலைப்பு வைத்ததன் மூலம் இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த கதை போய் சேரவேண்டும் என்பதில் இயக்குனர் எஸ்.ஆர் ராஜன் கவனமாக இருக்கிறார்” என்று கூறினார்.

“தயாரிப்பாளரும் இயக்குனருமான மதுராஜ் பேசும்போது, “படம் துவங்கும்போது தயாரிப்பாளர் எஸ்.ஆர் ராஜனுடன் நிறைய பேர் கூடவே இருந்தார்கள். ஆனால் படம் முடியும்போது அவர் தனி மரமாக இருந்ததை நான் கண்கூடாக பார்த்தேன். இந்த படத்தை பார்த்தபோது சொல்ல வந்ததை சரியாக சொல்லியிருக்கிறார் என்பது தெரிகிறது. அரசியலுக்கு பேச்சாற்றல் எப்படியோ அதுபோல திரையுலகுக்கு எழுத்தாற்றல் முக்கியம். அது இயக்குநர் எஸ் ஆர் ராஜனிடம் நிறையவே இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

நடிகை வனிதாஸ்ரீ பேசும்போது, “இதுதான் எனக்கு முதல் படம். இந்த படத்தில் நடிகர் மனோபாலாவுடன் இணைந்து நடித்துள்ளேன். இந்த படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்,

நாயகன் அசோக் குமார் பேசும்போது, “இந்தப் படத்தின் முதுகெலும்பு என்றால் அது இயக்குநர் எஸ்.ஆர் ராஜன் ஒருவர் தான். இமெயில் என்றால் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் இவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்ற மையப்படுத்தி ஒரு அழகான திரைக்கதையை நிறைய திருப்பங்களுடன் அவர் அமைத்துள்ளார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக ஜாக்கிசான் மற்றும் குங்பூ படங்களிலிருந்து குறிப்புகளை எடுத்து வடிவமைத்தார்கள். நேபாளத்திலிருந்து வந்த பீர் மாஸ்டர் என்பவர் இந்த சண்டை பயிற்சியை கவனித்தார். சண்டையின்போது எனது காது கிழிந்து விட்டது. மக்களிடம் இந்த படம் போய் சேரும்போது அந்த வலியெல்லாம் பெரிதாக தெரியாது. இயக்குநர் ராஜனின் இந்த துணிச்சலுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது, “இந்த தலைப்பிற்கு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. இமெயில் என்றாலே இன்று எல்லோருக்கும் தெரியும். இந்தப்படம் ஒரு கேமை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது என்பது தெரிகிறது. கேம் என்றாலே பிரச்சினைதான். அது பிக்பாஸ் கேமாக இருந்தாலும் சரி, போனில் இருக்கும் கேமாக இருந்தாலும் சரி எந்த கேமாக இருந்தாலும் அதில் நிச்சயமாக நமது மனது ஈடுபடத்தான் செய்யும். நாம் என்னதான் விளையாட்டிற்குள் சென்றாலும் கூட நமது மனதை பாதுகாப்பாக தற்காத்து வைக்க வேண்டும். ஆனால் அது இந்தக்கால தலைமுறையினரிடம் மிகவும் குறைவாக இருக்கிறது. பிறந்த குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு நம்மை விட எல்லாமே அதிகமாக தெரிகிறது. எனது மூன்று வயது மகள் கூட மொபைல் மூலமாக ஆன்லைனில் பணம் கட்டும் அளவிற்கு வளர்ந்து விட்டாள். அதேசமயம் குழந்தைகளுக்கு எதை எவ்வளவு சொல்லிக் கொடுக்க வேண்டும், எதில் அவர்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதை பெரியவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த படத்தில் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று கூறினார்.

இமெயில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எஸ்.ஆர் ராஜன் பேசும்போது, “இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். இதில் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் எல்லாமே இருக்கிறது. இரண்டு பாடல்கள், மூன்று சண்டை காட்சிகள் உள்ளது. மும்பை, கோவா, தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி என ஐந்து மாநிலங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி உள்ளேன். இந்த படம் ஒரு ஆன்லைன் கேம் மோசடி பற்றிய கதை” என்று கூறினார்.

இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது.