கைதி இரண்டாம் பாகம் நீதிமன்ற தடை விவகாரம்: டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

0
30

கைதி இரண்டாம் பாகம் நீதிமன்ற தடை விவகாரம்: டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பாக கேரள நீதிமன்றம் விதித்துள்ள தடை குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் “எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது”

“அதே சமயம் கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபு.