செக் மோசடி வழக்கில் சரத்குமார் – ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை

0
28

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் உள்ளிட்டோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் , நடிகர் விக்ரம் பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ‘இது என்ன மாயம்’. இந்த படம் தயாரிப்புக்காக ரேடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014-ம் ஆண்டு ஒன்றாரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தனர்.

இந்த பணத்தை 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தனர். பணத்தை கொடுக்காத பட்சத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமை, அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையை தருவதாகவும் உத்திரவாதம் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகர் உள்ள சொத்துக்களையும் ரேடியன்ஸ் நிறுவனத்திடம் அடமானமாக கொடுத்திருந்தனர். ஆனால் இந்த உத்திரவாதத்தை மீறி ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை இவர்கள் தயாரித்து வெளியிட்டதால் ரேடியன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் ராதிகா, சரத்குமார் ஆகியோர் அடமானம் வைத்த சொத்துக்களை விற்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் பணத்தை திரும்ப செலுத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடனை திருப்பி செலுத்த ரேடியன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 7 காசோலைகள் திரும்ப வந்ததையடுத்து மூன்று பேருக்கும் எதிராக ரேடியன்ஸ் நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு பிறகு எம்.பி., எம்.எல்.ஏ’க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறபு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனையும் , ராதிகா சரத்குமார் மற்றும் ஸ்டீபன் ஆகியோருக்கு இரண்டு வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.