“ஊடகச் சுதந்திரம் மற்றும் ஊடகத்தினரின் நலன் பாதுகாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

0
7

“ஊடகச் சுதந்திரம் மற்றும் ஊடகத்தினரின் நலன் பாதுகாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

ஊடகங்கள் மீது கடந்த ஆட்சியில் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இன்று (27.6.2021) ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பின் தலைவர் என். ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் (NWMI) சார்பில் திருமதி லட்சுமி சுப்பிரமணியன் மற்றும் திருமதி இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் பீர் முகமது ஆகியோர் சந்தித்து, 24.6.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு அளித்த பதிலுரையில், “கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்” என்று அறிவித்து, ஜனநாயகத்தின் அடிநாதமான பேச்சுச் சுதந்திரத்தைப் பாதுகாத்ததற்கு தங்களது மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

மேலும், கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பில் தமிழ்நாடு நாட்டிற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்றால், ஊடகச் சுதந்திரத்திற்கும் அதில் பெரும் பங்கு இருக்கிறது. அதனைப் பேணுகிற அரசியல் மரபிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதால் நீங்கள் இந்த நல்ல முடிவை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிவித்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றும், ஊடகத்தினரின் நலன் பேணப்படும் என்றும் ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினரிடம் உறுதி அளித்தார்.