வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகல்! மற்றபடி வணங்கான் படப்பணிகள் தொடரும்!! அதிகாரபூர்வமாக அறிவித்த பாலா!!!

0
262

வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகல்!

மற்றபடி வணங்கான் படப்பணிகள் தொடரும்!!

அதிகாரபூர்வமாக அறிவித்த பாலா!!!

தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா. விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த பாலா தன் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க செய்தார். மேலும் இப்படத்திற்காக தேசிய விருதையும் தட்டி சென்றார் பாலா.

‘2டி என்டேர்டைன்மெண்ட்’ சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை துவங்கினார் பாலா. அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கு சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்தியை சூர்யா தரப்பு மறுத்தது. இதையடுத்து இப்படத்தின் நிலை என்ன என்பதே தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலா வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே ‘வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம்.

மற்றபடி ‘வணங்கான்’ படப்பணிகள் தொடரும்…

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.