மீண்டும் பூஜையுடன் தொடங்கிய நடிகர் சங்க கட்டிட பணிகள்

0
267

மீண்டும் பூஜையுடன் தொடங்கிய நடிகர் சங்க கட்டிட பணிகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு கடந்த 2016-ல் கட்டுமான பணிகளை தொடங்கினர்.

திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சி கூடம், நடிப்பு பயிற்சி மையம் போன்றவை கட்டப்பட்டு வந்தன. 60 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் 2019-ல் நடந்த நடிகர் சங்க தேர்தல் வழக்கு சர்ச்சைகளால் கட்டுமான பணிகள் முடங்கின.

வழக்குகள் முடிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றதும் மீண்டும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட முயற்சி எடுத்தனர். ஆனாலும் நிதி இல்லாததால் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து வங்கியில் கடன் கேட்டனர். நடிகர்-நடிகைகளும் நிதி வழங்கினார்கள். தற்போது போதுமான நிதி கிடைத்துள்ள நிலையில் 22.04.24 அன்று நடிகர் சங்க கட்டிட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது.

கட்டுமான பணியை நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கிவைத்தார். பொருளாளர் திரு. சி.கார்த்தி, துணைத் தலைவர் திரு பூச்சி எஸ்.முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர் குமாரி சச்சு, கட்டடக் குழு உறுப்பினர் திரு. கடலோரக் கவிதைகள் ராஜா, நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ், பொறியாளர் அனில், Pro ஜான்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த வருடம் இறுதிக்குள் கட்டிடத்தை கட்டி முடித்து திறப்பு விழா நடத்த திட்டமிட்டு உள்ளனர்.