சிம்பு – ஹன்சிகாவின் மஹா படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரி இயக்குனர் வழக்கு : மே 19-ல் பதிலளிக்க உத்தரவு!

0
41

சிம்பு – ஹன்சிகாவின் மஹா படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரி இயக்குனர் வழக்கு : மே 19-ல் பதிலளிக்க உத்தரவு!

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடித்துள்ள மகா படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை கோரி, அப்படத்தின் இயக்குனர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் மகா என்ற படத்தை எக்ஸெட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கினார்.

இந்நிலையில், தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாக கூறி, படத்தை வெளியிட தடை கோரி இயக்குனர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், கதைப்படி விமான பணிப்பெண்ணாக இருக்கும் கதாநாயகி ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறார். அதை கதாநாயகி கண்டுபிடிப்பது தான் கதை என்றும், இந்த கதைக்கு தேவையான காட்சிகளை எடுக்காமல் தனது உதவி இயக்குனரை வைத்து படமாக்கியுள்ளதாகவும், தனக்கு தெரியாமல் படத்தை எடிட் செய்து, பின்னணி குரல் பதிவு செய்து படத்த வெளியிட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

மேலும், தனக்கு தெரியாமல், எடுக்க வேண்டிய காட்சிகளை எடுக்காமல், தன் கதைக்கருவை வேறு சிலரை வைத்து படத்தை முடித்ததற்காக தனக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுவுக்கு மே 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, எட்சட்ரா தயாரிப்பு நிறுவனத்துக்கும், உதவி இயக்குனர் அஞ்சு விஜய் மற்றும் படத் தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.