எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது – அந்நியன் பட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு இயக்குனர் ஷங்கர் பதிலடி!

0
2

எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது – அந்நியன் பட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு இயக்குனர் ஷங்கர் பதிலடி!

‘அந்நியன்’ கதை தனக்கே சொந்தம் என்று இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

ரன்வீர் சிங் நடிப்பில் ‘அந்நியன்’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அந்த திரைப்படத்தை ‘பென் ஸ்டூடியோ’ என்ற தயாரிக்கவிருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் புதன்கிழமை அறிவித்தார். ஆனால், இந்தத் திரைப்படத்தை ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை பெறவில்லை என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் வழக்கு தொடரவுள்ளார். இதற்காக இயக்குனர் ஷங்கர் மற்றும் அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்தப் படத்தின் அனைத்து மொழிக்கான உரிமையும் தன்னிடமே உள்ளது என்றும், அந்தக் கதையை சுஜாதாவிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்து முறையாக பெற்றுள்ளேன் என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் ” ’அந்நியன்’ படத்தின் கதை திரைக்கதை எனக்கே சொந்தம். அந்நியன் கதை திரைக்கதையை எழுதித்தரக்கோரி நான் யாரிடமும் கேட்கவில்லை. வசனம் மட்டும் சுஜாதா எழுதினார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அந்நியன் 2005-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, அதன் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படமும் வெளியானது.

படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை. ஆதலால், இதன் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும், எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதை கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்தப் படத்துக்கு அவர் வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும், அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.

திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ, உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளையும் கோர முடியாது, ரீமேக் செய்யவும் முடியாது. ஏனெனில் அந்த உரிமை உங்களுக்கு எழுத்துபூர்வமாக தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின் கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

ஒரு தயாரிப்பாளராக, ‘அந்நியன்’ படத்தின் மூலம் நல்ல லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையின்றி, உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். இந்த விளக்கத்துக்குப் பின்னராவது உங்களுக்கு ஒழுங்கான புரிதல் வரவேண்டும். இனி இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களை பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.