’தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன?’ முடிவுக்கு வந்த கர்ணன் சர்ச்சை

0
105

‘தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன?’ முடிவுக்கு வந்த கர்ணன் சர்ச்சை

பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி வரும் படம் ‘கர்ணன்’. இதில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் கர்ணன் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்தப் படத்தில் இடம்பெறும் ‘பண்டாரத்தி’ என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனாலும் இந்தப் பாடலில் வரும் ‘பண்டாரத்தி’ என்ற சொல் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக தெரிவித்தும், படத்தில் இருந்து இந்தப் பாடலை நீக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன்.

பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன … பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான் .ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்…காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்.