எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் காட்டுமிராண்டித்தனம் – முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்

0
105

எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் காட்டுமிராண்டித்தனம் முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை: புதுச்சேரி வில்லியனூர் விழுப்புரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை. நேற்று அடையாளம் தெரியாத நபர் சிலர் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு அணிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அதிமுக வை சேர்ந்த தொண்டர்கள் அந்த இடத்தில் முற்றுகையிட்டனர். மேலும் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை முன்னிட்டு பாதுகாப்புக்காக காவல்துறையின் அங்கு குவிக்கப்பட்டனர்.

அதிகாரிகள் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்த அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலை மீது இருந்த காவித் துண்டை அகற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “ எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கபடுத்திய கொடுஞ்செயல், மன வேதனை அளிக்கிறது.

காவித்துண்டு அணிவித்தது காட்டுமிராண்டித்தனமானது, கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஒருமைப்பாட்டை சீர்குலைத்துவிட்டு அரசியல் பிழைப்பிற்கு சிலர் திட்டமிடுகின்றனர். சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது வருத்தத்தை தருகிறது. சிலையை அவமதித்தவர்கள் மீது புதுச்சேரி முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.