திருக்கடையூர் கோவிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேக விழா!

0
177

திருக்கடையூர் கோவிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேக விழா!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயில் அமைஞ்சிருக்குது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலமாதலால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருது. மேலும் இத்தலத்தில் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக அபிராமி அம்மன் அமாவாசையை பௌர்ணமி ஆகிய நிகழ்வும் நடந்துருக்குது.

இக்கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு நேத்து மாலை 80 வயதை அடைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியம் இசைக்க கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோயில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை மற்றும் கஜ பூஜை செய்தார். தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன

தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். பூஜைகளை ராமலிங்க குருக்கள் தலைமையிலான 21 சிவாச்சாரியார்கள் செய்து வைத்தார்கள்.