கலைஞர் கோட்டம் திறப்புவிழா : ”உங்கள் திருமுகம் காண காத்திருக்கிறேன்..” – உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!

0
103

கலைஞர் கோட்டம் திறப்புவிழா : ”உங்கள் திருமுகம் காண காத்திருக்கிறேன்..” – உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!

வள்ளுவர் கோட்டமும்! கலைஞர் கோட்டமும்!

சென்னை: கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை 15 மாதங்களில் கட்டி மகத்தான சாதனை படைத்திருக்கிறது திராவிட மாடல் அரசு உள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவாக மிகப்பெரிய நூலகம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சித்தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் பெருமிதம் அடைந்துள்ளார்.

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் அழைப்பு மடல்.

நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நாம் நினைக்காத நாளில்லை; எண்ணாத பொழுதில்லை. நெஞ்சம் அவரை நினைக்கும்போதும், அவரது பெயரை அடிமனதிலிருந்து உச்சரிக்கும்போதும் உடன்பிறப்புகளான உங்களுக்கும் உங்களில் ஒருவனான எனக்கும் உற்சாகம் பிறக்கிறது; உத்வேகம் கிடைக்கிறது!

தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பெயர், கலைஞர்! எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கலைஞர்தான்! ஜனநாயக அறப்போர்க்களத்தில் வாளாகவும் கேடயமாகவும் இருந்து நம்மையும் நம் உயிர்மூச்சான கழகத்தையும் காத்து வருபவர் கலைஞர்!

அவரை நாம் நினைக்க நினைக்க, எத்தகைய பகையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் எதிர்நிற்க முடியாமல் தெறித்து ஓடும். அத்தகைய மகத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் ஜூன் 7-ஆம் நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட வடசென்னையில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தோழமைக் கட்சித் தலைவர்கள் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு உள்ளன்புடன் புகழ் வணக்கம் செலுத்தி, நாட்டைச் சீரழித்துவரும் ஜனநாயக விரோத – பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதியேற்றார்கள். அதே உறுதியை அந்தக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய உங்களில் ஒருவனான நானும் ஏற்றுச் செயல்பட்டு வருகிறேன்.

‘சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்’ என்ற அரசியல் இலக்கணம் வகுத்துத் தந்த தலைவரல்லவா நம் முத்தமிழறிஞர் கலைஞர்! அதனால், சொல்லாக மட்டும் இல்லாமல் செயல் வடிவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது கலைஞரின் நூற்றாண்டு.

சென்னை கிண்டியில் 4.89 ஏக்கர் பரப்பளவில், 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த 2022 மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 6 தளங்களும் 1000 படுக்கைகளும் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை 2023 ஜூன் 15-ஆம் நாள் மருத்துவர்கள் – செவிலியர்களுடன் இணைந்து உங்களில் ஒருவனான நான் திறந்து வைத்தேன். தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய பிறந்தநாளை எளிய மக்களுக்காக – விளிம்புநிலை மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில், அவர் பெயரில் ஏழை – எளியோர் உள்ளிட்ட அனைவரும் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், குடல்-இரைப்பை உள்ளிட்டவற்றுக்கான சரியான சிகிச்சையை மேற்கொண்டு, உடல்நலன் காத்து, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் போலவே நீண்ட காலம் வாழ்ந்திடுவதற்கான திட்டம்தான், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை. 15 மாதங்களில் இந்த மகத்தான சாதனையை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது நமது ‘திராவிட மாடல்’ அரசு.

அதே நேரத்தில், மதுரையில்….. உடன்பிறப்புகளுக்கு என்ன நினைவு வரும் என்பதை உங்களில் ஒருவனான நான் அறிவேன். நான் அதைச் சொல்ல வரவில்லை. எப்போதும் ஆக்கப்பூர்வமான செயல்களையே விரும்புகிறவன் நான். வீணாக்குவதை விரும்புவதில்லை. தமிழ் வளர்த்த மாநகராம் மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக மிகப் பெரிய நூலகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகத்தை சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் எனப் பெயரிட்டு அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருடைய நூற்றாண்டில் மதுரையில் அவர் பெயரிலான நூலகம் விரைவில் திறக்கப்பட்டு, இளைய தலைமுறைக்கான அறிவுக் கருவூலமாக செயல்படவிருக்கிறது.

ஓராண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்ற முனைப்புடன் நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. பன்முக ஆற்றல் கொண்ட நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் பங்கேற்புடனும் ஆலோசனைகளுடனும் நூற்றாண்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திராவிட மாடல் அரசாங்கத்தின் சார்பிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஒருபுறம், அரை நூற்றாண்டு காலம் அவர் கட்டிக்காத்த ஜனநாயகப் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான நூற்றாண்டு கொண்டாட்டங்கள் மறுபுறம், கலைஞர் மீது பற்று கொண்ட தோழமை இயக்கத்தினர் கொண்டாடும் நிகழ்வுகள் என முப்பெரும் விழாவாக கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக, கழக உடன்பிறப்புகள் அனைவரையும் அழைப்பதற்காக உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி, தனது சளைக்காத போராட்டத்தினால் இந்தியாவுக்கே வழிகாட்டும் மூத்த தலைவராக உயர்ந்து நின்ற முத்தமிழறிஞர் கலைஞரை நமக்குத் தந்த திருவாரூரில், அவரது அன்னையார் – எனது பாட்டி அஞ்சுகம் அம்மையார் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம்.

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழர்களுக்காக மட்டுமின்றி, உலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்குமான அறநெறியை – வாழ்வியலை விளக்கும் திருக்குறளை நமக்கு வழங்கிய திருவள்ளுவருக்கு, தமிழ்நாட்டின் தலைநகரில் ஒரு கோட்டம் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதனைத் திருவாரூர்த் தேர் வடிவில் மிகச் சிறப்பாக அமைத்துக் காட்டியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஒவ்வொரு கல்லும் அவர் பார்வைபட்டபிறகே, சிற்பி கணபதி ஸ்தபதி குழுவினரின் உளிகளால் வடிக்கப்பட்டன. வள்ளுவர் கோட்டத்தின் தேர், அதில் உள்ள வள்ளுவர் சிலை, குறள் மணிமண்டபம், பிரமாண்ட கலையரங்கம், படிக்கட்டுகள், முகப்பு என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அமைத்தவர் தலைவர் கலைஞர். முழுமையடைந்த வள்ளுவர் கோட்டத்தைத் திறப்பதற்காக நாள் குறிக்கப்பட்ட நிலையில், கழக ஆட்சி முழுமையடையாதபடி எமர்ஜென்சி காலத்தில் கலைக்கப்பட்டது.

உங்களில் ஒருவனான நானும் என்னைப் போன்ற கழக உடன்பிறப்புகள் பலரும் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறைவாசத்தையும் சித்ரவதைகளையும் அனுபவித்த காலம் அது. 1976 ஏப்ரல் 15 அன்று வள்ளுவர் கோட்டத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.பக்ருதீன் அலி அகமது அவர்கள் திறந்து வைத்தார். வள்ளுவர் கோட்டத்தைத் தன் சிந்தனைக் கருவில் சுமந்து, வளர்த்து, செயல்திட்டமாக ஈன்றளித்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களுக்குத் திறப்பு விழாவிற்கான முறையான அழைப்பு இல்லை. அவருக்கு அதில் பங்கேற்கும் வாய்ப்பும் இல்லை. ஆனால், அவர் எண்ணமெல்லாம் வள்ளுவர் மீதும் வள்ளுவர் கோட்டத்தின் மீதும்தான் இருந்தன. அந்தக் கோட்டத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள முரசொலி அலுவலகத்தில் உட்கார்ந்து, ‘கோட்டம் திறக்கப்படுகிறது – குறளோவியம் தீட்டப்படுகிறது’ என்று தன் ஆருயிர் உடன்பிறப்புகளுக்கு நீண்ட கடிதம் எழுதினார் தலைவர் கலைஞர். முரசொலியில் பொடிப்பொடி எழுத்துகளால் ஏறத்தாழ மூன்று பக்க அளவிற்கு வெளியான உணர்ச்சிமிகுந்த கடிதம் அது.

“கோட்டம் எப்படி அமைந்திட வேண்டும், வள்ளுவர் சிலை இருக்குமிடும் எப்படி அமைந்திட வேண்டும் என்பதற்கான ‘கோணல் மாணல்’ கோட்டுச் சித்திரங்களை நானே வரைந்து காட்டினேன்” என்று வள்ளுவர் கோட்டத்தின் வரைபடம் எப்படி உருவானது என்பதை அதில் விளக்கியிருப்பார் கலைஞர்.

1974-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் நாள் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய விழாவில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரும், அன்றைய பொதுச்செயலாளர் நாவலரும், பொருளாளர் இனமானப் பேராசிரியரும், தமிழறிஞர்கள் பலரும் ஆற்றிய அருந்தமிழ் உரைகளைத் தன் கடிதத்தில் எடுத்துக்காட்டும்போது, “அடடா! கரும்புத் தூண் நட்டு, கற்கண்டுக் கூரை வேய்ந்து, கனிச்சாறு கொண்டு தரைமெழுகி, சர்க்கரையால் கோலமிட்டிருந்தது போல இருந்தது அந்த விழா!” என்று குறிப்பிடுகிறார்.

அடிக்கல் நாட்டும் விழா இத்தனை இனிப்பாக – இனிமையானதாக இருந்த நிலையில், தனக்கு அழைப்பே இல்லாத வள்ளுவர் கோட்டத்தின் திறப்புவிழா நாளில் தன் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் முத்தமிழறிஞர் கலைஞர் தன் உடன்பிறப்புகளுக்கு விளக்கியிருக்கிறார்.

“சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல. எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறக்க முடியாத இடம். அந்த நம்பிக்கையுடன்தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக்கண்ணால் காணுகிறேன். உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேறுகால வேதனையையும், இனிய வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழ முத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கு அனுப்பிப் பின்னழகும், முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காண முடியாமல் மணப் பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒரு விதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்! என் தங்க உடன்பிறப்பே அந்தத் தாயின் மகிழ்ச்சியைத்தான் நான் பெறுகிறேன் இன்று” – என்று அந்தக் கடிதத்தில் தன் உள்ளத்து உணர்வுகளை உணர்ச்சிப்பூர்வமாக உடன்பிறப்புகளிடம் பகிர்ந்திருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர். ஒரு தாயின் மனநிலையில் இருந்த தலைவரின் தவிப்பினைக் கழக உடன்பிறப்புகள் முழுமையாக உணர்ந்த காரணத்தினால்தான், 13 ஆண்டுகாலம் பலவித நெருக்கடிகளுக்கிடையே தலைவர் கலைஞர் அவர்கள் கழகத்தைக் கட்டிக்காத்த போது, அவருக்கு உற்ற துணையாக இருந்த உடன்பிறப்புகளின் உழைப்பினால் 1989-ஆம் ஆண்டு தி.மு.கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது அதே வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்பு விழாவை நடத்தி, முதலமைச்சராக உறுதிமொழியேற்று, தன் சபதத்தை நிறைவேற்றினார் தலைவர் கலைஞர்.

அவரது நெஞ்சமெல்லாம் நிறைந்த வள்ளுவர் கோட்டத்தைப் போலவே, அவரது திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை நவீனத் தொழில்நுட்பத்துடன் ஓடச்செய்தவர் நம் தலைவர் கலைஞர். அந்தத் திருவாரூரில், தேர் போன்ற வடிவில் அவருக்குக் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டத்தில் அவரது திருவுருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை – என் தாத்தா முத்துவேலரின் பெயரிலான நூலகம், இரண்டு திருமண மண்டபங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. எதிலும் வல்லவர் என்று நான் பாராட்டிய மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இந்தப் பணிக்குப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் திரு.பூண்டி கலைவாணன் விழா ஏற்பாடுகளை அருமையான வகையில் கவனித்து வருகிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிகழ்வுகளின் வரிசையில், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அடுத்ததாகத் திருவாரூரில் கோட்டம் திறப்பு விழா என்றுதான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடையிலே, கோவையிலும் கலைஞரின் புகழ் போற்றி, கழகத்தின் வலிமையைக் காட்டும் வகையிலே தோழமைக் கட்சிகளுடன் இணைந்து களம் காணும் வகையில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம், பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நடந்தேறியிருக்கிறது. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியுள்ள இலட்சிய உணர்வினால், சோதனைகளையும் சாதனையாக்கும் வலிமையை உடன்பிறப்புகளாகிய ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் நலன் காக்கவும் – மாநில உரிமைகளை மீட்கவும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் துணிந்து நடைபோடுவோம் என்பதுதான் கோவையில் நடந்த கண்டனக் கூட்டம் விடுத்துள்ள செய்தி.

குறுக்கே வரும் தடைகளைத் தகர்த்து நம் பயணம் தொடர்கிறது. வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதுபோல, “சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல.” உறுதிமிக்க போராட்டத்தால் எதையும் சாதிப்போம். அந்த உணர்வுடன் கொள்கை வீரர்களாம் கழக உடன்பிறப்புகளை, ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.

மாண்புமிகு பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். மாண்புமிகு பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் முத்துவேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். நம் உயிர்நிகர் தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கிறேன். தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேசுவரன் வரவேற்புரையாற்றுகிறார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் கவியரங்கம், திரு.சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகளால் முத்தமிழறிஞர் கலைஞருக்கு அவரது திருவாரூரில் புகழ்மாலை சூட்டுகிறோம்.

ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்வாகவும், உயிராகவும் உள்ள நம் தலைவர் கலைஞரின் பெயரில் உயர்ந்து நிற்கும் கோட்டத்தின் திறப்புவிழாவில் உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன். பகை வெல்லும் பட்டாளமாய் – அறம் காக்கும் அணிவகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.