“உங்களால வர முடியலைனா என்ன.. நானே வர்றேன்” : கார் அனுப்பி வரவழைத்து மதுரை மாணவியை வாழ்த்திய முதலமைச்சர்!

0
29

“உங்களால வர முடியலைனா என்ன.. நானே வர்றேன்” : கார் அனுப்பி வரவழைத்து மதுரை மாணவியை வாழ்த்திய முதலமைச்சர்!

மதுரை மாவட்டம், திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஷோபனா, தான் கல்லூரி சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதினார்.

அம்மாணவியின் கடிதத்தை கனிவுடன் பரிசீலித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி ஷோபனாவிற்கு மதுரை – ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ பட்டப்படிப்பு பயில ஏற்பாடு செய்தார்.

தாயுள்ளத்துடன் உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கு தன்னிடம் பணவசதி இல்லை என்று அம்மாணவி முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

பல்வேறு அரசு திட்டப் பணிகளின் ஆய்வுப் பணிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.10.2021 அன்று மதுரைக்கு வருகை தந்தபோது, அரசு வாகனத்தை திருவேடகம் கிராமத்திற்கு அனுப்பி வைத்து, மாணவி செல்வி ஷோபனா மற்றும் அவரது பெற்றோரை மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

குடும்பத்தினரோடு வந்த அந்த மாணவிக்கு பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள், புத்தகைப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்தினார், இந்நிகழ்வின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உடன் இருந்தார்.

உயர்கல்வி படிக்க உதவி கோரிய பெண்ணுக்கு உதவி செய்ததோடு, மதுரைக்கு வந்ததும் நேரில் சந்தித்து வாழ்த்திய முதலமைச்சரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.