இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சென்னை : களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – நேரில் ஆய்வு!

0
163

இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சென்னை : களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – நேரில் ஆய்வு!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.

மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் வேக வேகமாக மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தார்.

பிறகு சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சுண்ணாம்பு கொளத்தூர் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களிலும் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த, “சென்னையில் கடந்த 2015லில் ஏற்பட்டது செயற்கை வெள்ளம். ஆனால், தற்போது ஏற்பட்டது இயற்கையான வெள்ளம். ரூ.4,000 கோடியில் பணிகள் நடந்ததால்தான் சென்னையில் பாதிப்புகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. சென்னையில் மழைபாதிப்பின் தாக்கம் கடந்த காலங்களைவிட குறைவாகவே உள்ளது. சென்னையில் இயல்பு நிலையைக் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.