சைரன் சினிமா விமர்சனம் : சைரன் விறுவிறுப்பான ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

0
637

சைரன் சினிமா விமர்சனம் : சைரன் விறுவிறுப்பான ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

நடிகர்கள் :
ஜெயம், கீர்த்தி, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, துளசி, அழகம்பெருமாள், அருவி மதன், யுவினா பார்த்தவி, அஜய், சுரேந்தர் (கே பி ஒய்), சாந்தினி தமிழரசன், லல்லு பிரசாத், ப்ராதனா, முத்து குமார்
தொழில்நுட்ப வல்லுநர்கள் :
தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார்
தயாரிப்பு நிறுவனம் – ஹோம் மூவி மேக்கர்ஸ்
இணை தயாரிப்பாளர் – அனுஷா விஜய்குமார்
எழுதி இயக்கியவர் – ஆண்டனி பாக்யராஜ் ஏ
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
பின்னணி இசை – சாம் சி.எஸ்.
எடிட்டிங் – ரூபன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் – கதிர் கே
கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ் எம்
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன்
நடன அமைப்பு – பிருந்தா
ஆடை வடிவமைப்பாளர்கள் – அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேதா, நித்யா வெங்கடேசன், ஜெபர்சன் டி.
நிர்வாக தயாரிப்பு – ஓமர்
தயாரிப்பு நிர்வாகி – சக்கரத்தாழ்வார் ஜி
தயாரிப்பு மேலாளர் – அஸ்கர் அலி ஏ
மக்கள் தொடர்பு சதீஷ் (AIM)
செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்த ஆயுள் தண்டனைக் கைதி திலகன் (ஜெயம் ரவி), சிறையில் நல்ல பெயர் எடுக்கும் திலகனுக்கு, தன் தந்தை மற்றும் மகளை பார்க்க 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கும் போது, திலகனின் மகள் (யுவினா பார்த்தவி) தன் அப்பா ஒரு கொலைக்கரான் என்று நம்புவதால் அவர் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார் மற்றும் அவரது பெயரைக் குறிப்பிடுவதைக் கூட வெறுக்கும்  கொலைகார அப்பாவைப் பார்க்க மாட்டேன் எனக் கூறி வீட்டில் இருந்து தன் அத்தையை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறார். திலகன் சிறையில் பரோலில் வந்ததின் நோக்கம் தனது மனைவி ஜென்னியை (அனுபமா பரமேஸ்வரன்) கொலை செய்து, இந்த கொலை பழியை தன் மீது சுமத்தி ஆயுள் தண்டனை பெற செய்த உண்மையான கொலைகார அயோக்கியர்களை பழி வாங்கவும் முயற்சி செய்கிறார். மறுபுறம், காவலில் வைக்கப்பட்ட கைதி சித்திரவதையால் மரணித்ததாக கூறப்படும் குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார் இன்ஸ்பெக்டர் நந்தினி (கீர்த்தி சுரேஷ்). ஆனால் நந்தினி தான் யாரையும் கொல்லவில்லை என்று தொடர்ந்து கூறுகிறார். விடுவிக்கப்பட்ட பின்னர் பணிக்குத் திரும்பிய இன்ஸ்பெக்டர் நந்தினி, திலகன் தினந்தோறும் வந்து கையெழுத்து போடும் அதே காவல் நிலையத்தில் பணிக்கு திரும்புகிறார். திலகன் வெளியே வந்த நேரம் அவரைச் சுற்றி அடுத்தடுத்து செல்வாக்கு மிக்க நபர்கள் ஒரு சிலர் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். இன்ஸ்பெக்டர் நந்தினி திலகன் தனது பரோல் நேரத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் இந்த கொலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று சந்தேகிக்கத் தொடங்குகிறார். இன்ஸ்பெக்டர் நந்தினி திலகன் சம்பந்தப்பட்ட தகவல்களையும், கொலை ஆனவர்களின் தடயங்களை சேகரிக்கிறார், ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிகிறது. இந்தக் கொலைகளின் பின்னணி என்ன? லாக்கப் மரணத்தால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் நந்தினி இந்த கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் கண்டுபிடித்தாரா இல்லையா? எதற்காக எதிரிகள் திலகனின் மனைவியை கொலை செய்து பழியை திலகன் மீது சுமத்தினார்கள்? திலகன் மகளுடன் மீண்டும் இணைந்தாரா? திலகன்  எதிரிகளை பழி தீர்த்தாரா? போன்ற கேள்விகளுக்கு சைரன் கதை ‘நான் லீனியர்’ முறைப்படி விவரிக்கிறது.
நடிகர் ஜெயம் ரவி இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் இரண்டு வித்தியாசமான தோற்றங்கள் உடன் நடித்துள்ளார். வழக்கமாக சாக்லேட் பாய், மற்றும் ஆக்ஷன் ஹீரோவா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெயம் ரவி, சமீபகாலமாக கதை மற்றும் கதாபாத்திர தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வந்து, தன்னுடைய கடின உழைப்பால் இன்று முன்னணி கதாநாயகனாக மாறியுள்ளார். ஜெயம் ரவி இதுவரை மெச்சூர்ட் கேரக்டர் ஏற்று நடித்ததில்லை. இந்த படத்தில் ஒரு நடுத்தர வயதுக்காரராக, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்து பழிவாங்கும் ஆயுள் தண்டனை கைதியாக மாறும் ஜெயம் ரவி, இரண்டு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு பரிமாணத்தில் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். மகளை பிரிந்த அப்பாவுக்கு இருக்கும் ஏக்கத்தை, பரோலில் வெளிவந்த பிறகு தன் மகளைப் பார்ப்பது மற்றும் அவள் பிறந்த போது அவளைப் பார்ப்பது போன்ற காட்சிகளில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். இன்னும் அயராத உழைப்பை தந்து இது போன்ற பல கெட்டப்களுடன் கதை தேர்வு செய்து நடித்தால் கண்டிப்பாக விரைவில் சினிமாவில் இருந்து ஒதுங்கி முழுநேர அரசியல் தலைவராக மாற தயாராகும் விஜய்-யின் அந்த இடத்தை தனது ரசிகர்கள் பேராதரவுடன் ஜெயம் ரவி பூர்த்தி செய்வார்.
கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி ஜெயம் ரவிக்கு இணையாக திரையை ஆக்கிரமித்து இறுக்கமான முகபாவனையுடன் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.
ஜெயம் ரவியின் ஷேடோ போலீஸாக பயணிக்கும் கான்ஸ்டபிள் வேளாங்கண்ணி கதாபாத்திரத்தில் யோகி பாபுவின் நகைச்சுவை அருமை.
இரண்டாம் நாயகியாகவும் ஜெயம் ரவியின் மனைவியாக அனுபமா பரமேஸ்வரன், ஜெயம் ரவியின் மகளான யுவினா  பார்த்தவி, அம்மாவாக துளசி, போலீஸ் எஸ்.ஐ யாக அருவி மதன், கே பி ஒய் சுரேந்தர், சகோதரியாக சாந்தினி தமிழரசன், லல்லு பிரசாத், முத்து குமார் உட்பட அனைவரும் நேர்த்தியான நடிப்பு வழங்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்து உள்ளனர்.

சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், அஜய் என மொத்தம் மூன்று வில்லன்கள் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இரவு வெளிச்சத்தில் காட்சிகளை பிரமிக்கும் வகையில் அற்புதமாக காட்சிப்படுத்திய கேமராமேன் செல்வகுமார், திலீப் மாஸ்டர் சண்டைக்காட்சிகள், ஜி.வி.பிரகாஷின் இசை, சாம் சி.எஸ். பின்னணி இசை, ஆர்ட் டைரக்டர் சக்தி வெங்கடராஜ் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு க்ரைம், ஆக்ஷன், த்ரில்லர் கதைக்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

நாயகனின் கடந்த கால மற்றும் நிகழ்கால காட்சிகளை எந்த வித குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாக முன்வைத்து நான் லீனியரில் பயணிக்கும் திரைக்கதைக்கு இண்டர்கட் காட்சிகள் மூலம் பலம் சேர்த்துள்ளார் எடிட்டர் ரூபன்.

தமிழ் சினிமாவில் வழக்கமான கதையை சோர்வு இல்லாமல் கொண்டு செல்வது இயக்குனர்களுக்கு ஒரு சவாலான பணி. ‘சைரன்’ ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனத்தையும் குறிக்கும். இந்த இரண்டு சைரனுக்கும் இடையில் நடக்கிற கதைகளத்தில், காதல், ஆக்ஷன், மகள் பாசம், குடும்ப பாசம், காமெடி, போலீஸ் விசாரணை, அரசியல், மிரட்டும் வில்லன்கள், பழிவாங்கல், சாதி வெறி என அனைத்தையும் திரைக்கதையில் புகுத்தி ‘நான் லீனியர்’ பாதையில் அழுத்தமான வசனங்களாலும், நேர்த்தியாக கையாண்டுள்ளார் அறிமுக இயக்குநர் அந்தோனி பாக்கியராஜ்.

மொத்தத்தில் குடும்ப அம்சங்களுடன் பிரம்மாண்ட பொருட்செலவில் ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் மற்றும் இணை தயாரிப்பாளர் அனுஷா விஜய்குமார் தயாரித்துள்ள சைரன் விறுவிறுப்பான ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர்.