பா.ரஞ்சித் எனக்கு எதிரி இல்லை – இயக்குனர் மோகன் ஜி அதிரடி

0
156

பா.ரஞ்சித் எனக்கு எதிரி இல்லை – இயக்குனர் மோகன் ஜி அதிரடி

‘பழைய வண்ணாரப்பேட்டை’,  ‘திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  அடுத்ததாக தயாரித்து இயகியிருக்கும் படம்  ‘பகாசூரன்’.

இந்தப்  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்களும் டிரைலரும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பாகசூரன்’ வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினரும் திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவனடியார் அண்ணாமலை சுவாமிகள் பேசியபோது, ”

இந்தப்படத்தின் பாடல்களில் ‘என் அப்பன் அல்லவா..” பாடல் எல்லோர் மனதையும் உருக்கும் வகையில் நவீன காலத்திற்கு ஏற்றார்போல் உயிர்ச்சொல்லாக அமைந்துள்ளது. இந்தப்பாடல் படத்தின் உச்சமாக இருக்கும். இந்த பாடலுக்கு திரையரங்கில் ஆடாதவர்களே இருக்கமுடியாது. திரைக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”

படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ராதாரவி பேசியதாவது:-

“ரொம்ப நாளைக்குப் பிறகு ‘பகாசூரனில்’ வில்லன் வேடம் பண்ணியிருக்கேன். படத்தில் அருமையான கதைக்கருவை மோகன் ஜி எடுத்துள்ளார். அவர் எப்போதும் சமூக அக்கறை கொண்டவர். அம்பேத்கர் சாதித்தலைவர் அல்ல; பொதுத்தலைவர் என்று பேசியவர். இப்படத்தில் நடித்திருக்கும் செல்வராகவன், சிறந்த நடிகருக்கான விருதை பெருவது நிச்சயம். காட்சிகளில் நடிக்கும்போது அவரை வாடா போடா என்று பேசவேண்டும். ஆனால் அப்படி பேசியபோது எனக்கு ரொம்ப தயக்கமாக இருந்தது. இந்தப்படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை.

இறுதியாக,  இளைஞர்கள் தாய், தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீர்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன்”

தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசியதாவது:-

“இயக்குனர் மோகன் ஜி புரட்சியாளன். வித்தியாசமான சிந்தனை கொண்டவன். ஏற்கனவே இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ வித்தியாசமாக பேசப்பட்டு,அதன் பிறகு இந்தப்படம் வெளியாகிறது. இதுவும் வழக்கமான கதை அல்ல. இன்றைய சூழலில் வாழ்க்கையை புரட்டிப்போடும் கொடூரமான செய்தி. இந்தப்படத்தில் எனக்கு மிகப்பெரிய வேடத்தை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.

இந்தியாவிலேயே சிறந்த இயகுனர்களில் ஒருவரான செல்வராகவன், சிறந்த ஒளிப்பதிவாளரான நட்டியும் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் நான் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து திரும்பும்போது “அண்ணே.. பகாசூரன் படம் பார்த்தேன் சூப்பரா நடிச்சிருக்கீங்க. படமும் நல்ல படம் என்று பாராட்டினார். அதோடு கலைஞர் டிவி ஒளிப்பரப்பு உரிமையை வாங்கிட்டேன் என்றார். இந்தப்படத்துக்குப் பிறகு மோகன் ஜியின் புகழும் பெயரும் உயரத்திற்கு போய்விடும். இது பகாசூரன் அல்ல; பக்கா சூரன்.

இந்தப்படத்தை ரெட்ஜெயன்ட் மிரட்டி வாங்கியதாக சவுக்கு சங்கர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார். இந்த விஷயத்தை கே.ராஜனிடம் கேட்டால் ஒத்துக்கொள்வார் என்றும் பேசியிருக்கார். இப்போ நான் சொல்றேன் நான் ஒத்துக்கமாட்டேன். சினிமாவே தெரியாமல் பேசக்கூடாது. ரெட்ஜெயன்ட் நிறுவனமோ, சென்பகமூர்த்தியோ யாரும் மிரட்டவில்லை”

இசையமைப்பாளர் ஷாம் சி.எஸ் பேசியதாவது:-

”சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தபோது 65 வயதுள்ள ஒரு அம்மா ‘என் அப்பன் அல்லவா’ பாடலை பாராட்டி பேசினார். ஆனால் அந்தப்படாலை பாடியதும் நான்தான் என்று அவருக்கு தெரியவில்லை. கிறுஸ்துவனான நான் இந்தப் பாடலை பாடியது சிலருக்கு கேள்வியை ஏற்படுத்தியது. இசைக்கும் இசையமைப்பாளனுக்கும் மொழி, சாதி, பேதம் கிடையாது. இந்த பாடல் உணர்ச்சிகரமாக இருந்து கடவுளுடன் பேசவைத்தால் ஒரு கலைஞனாக நான் பெருமைப்படுகிறேன். இந்தக்கதையை கேட்பதற்கு முன் மோகன் ஜி சாதி ரீதியிலான படங்களை எடுக்கும் இயக்குனர் என்று சொன்னார்கள். ஆனால் இது சாதி கதையல்ல. விழிப்புணர்வு இல்லாத தாய்மார்கள், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம்.”

நடிகர் நட்டி பேசியதாவது:-

“பகாசூரன் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கவேண்டிய; அனைவருக்கும் தேவையான படமாக இருக்கும். ஷாம் சி.எஸ், பாடல், பின்னணி இசை இரண்டையும் சிறப்பாக செய்திருக்கிறார். மோகன் ஜி மேலோட்டமாக ஒரு விஷயத்தை எடுத்து படம் பண்ணும் ஆள் இல்லை. எங்கே பிரச்சனை நடகிறதோ அங்கோ சென்று சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து படம் பண்ணும் இயக்குனர். கதை சொல்லும்போதே அத்தனை ஆதாரங்களையும் கொடுக்கக்கூடிய இயக்குனர். செல்வராகவன் ஆகச்சிறந்த இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படத்துக்குப் பிறகு ஆகச்சிறந்த நடிகர் என்பதையும் நிரூபிப்பார். படத்தில் அவர் அழுதால் நாமும் அழுவோம். அவர் வருத்தப்பட்டால் நாமும் வருத்தப்படுவோம். அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். இந்தப்படம் சமூகத்துக்கு தேவையான படம்.”

கதையின் நாயகன் செல்வராகவன் பேசியதாவது:-

“இங்கு திறமை இல்லாத யாரும் சதாரணமாக ஜெயித்துவிடமுடியாது. மோகன் ஜி கடுமையான உழைப்பாளி, திறமைசாலி. சினிமா மீது அவ்வளவு மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருக்கக்கூடிய நல்ல இயக்குனர். நேரம் காலம் பாராமல் படக்குழுவினர் உழைத்திருக்கின்றனர். நான் இயக்குனராக இருக்கும்போது ஓடிக்கொண்டே இருப்பேன். யாரையும் கவனிக்க, திரும்பிப்பார்க்க நேரம் இருக்காது. ஆனால் இந்தப்படத்தில் நடிகராக இருக்கும்போது பெரிய டெக்னீஷியன்ஸ், கலைஞர்கள் சாதாரணமாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை கொடுத்த மோகன்  ஜிக்கு நன்றி”

படத்தின் இயக்க்குனரும் தயாரிப்பாளருமான மோகன் ஜி பேசியதாவது:-

“படத்தின் டிரைலர் டீசரை பார்த்துவிட்டு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. இதற்கு என்னோடு சேர்ந்து பணியாற்றிய அனைவருமே காரணம் என்றாலும்  ஒளிப்பதிவாளர் ஃபரூக், இசையமைப்பாளர் ஷாம் சி எஸ் முக்கியமானவர்கள். அவர்களுக்கு நன்றி. இதுக்கு முன்னாடி நான் ஒரு மேடையில் பேசும்போது. தயாரிப்பாளரா ஜெயிக்க முடியலைன்னு பேசியிருந்தேன். இப்போ தயாரிப்பாளரா ஜெயிக்கப்போவது மக்கள் கையில்தான் இருக்கு.

செல்வராகவன் சார் அமைதியானவர் ரொம்ப பேசமாட்டார் என்று இங்கு பேசியவர்கள் சொன்னார்கள். ஆனால் நானும் செல்வா சாரும் நிறைய பேசியிருக்கோம் . படப்பிடிப்பின் இடையே அவருடன் அமர்ந்து அவருடைய அனுபவங்களை கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறேன். அவரது ‘காதல்கொண்டேன்’ படத்தை பார்த்துதான் எனக்கு இயக்குனராகும் ஆசை வந்தது. அதேபோல் நட்டி சாருடைய ‘ஜப்விமெட்’  படம் பார்த்துட்டு அவரை சந்திக்க ஆசைப்பட்டிருக்கேன். ‘பகாசூரன்’ யார் என்பது படம் வந்தபிறகு உங்களுக்கு தெரியும். இது அனைவருக்குமான படம். நான் ஒரு பிரிவினரை எதிர்த்து படம் பண்ணுவதாக சொல்கிறார்கள். அதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை. ப.ரஞ்சித் பட்டியலினத்தவருக்கும் நான் ஓபிசி மக்களுக்குமான படங்களை எடுப்பதாக ஒரு பார்வை இருக்கிறது. சினிமாவில் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. நான் பார்த்த அனுபவித்த விஷயங்களைதான் படமாக எடுக்கிறேன். சமூகத்திற்கு சமநிலையை ஏற்படுத்தும் தேவையான படங்களை தொடர்ந்து நான் பண்ணிக்கொண்டே இருப்பேன்”

முன்னதாக பகாசூரன் படத்தை தமிழகமெங்கும் வெளியிடும்  கௌதம் அவரது நிறுவனத்தின் லோகோவை நடிகர் ரிச்சர்ட் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் தேனப்பன், கவிஞர் சினேகன், நடிகர்கள், கூல்சுரேஷ், குட்டி கோபி, சரவண சுப்பையா, சண்டை பயிற்சியாளர் மிரட்டல் செல்வா, டான்ஸ் மாஸ்டர் ஜானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.