அற்புத கலைஞர் ஸ்ரீகாந்த் அமரராகி விட்டார் – நடிகர் சிவகுமார் இரங்கல்

0
33

அற்புத கலைஞர் ஸ்ரீகாந்த் அமரராகி விட்டார் – நடிகர் சிவகுமார் இரங்கல்

இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார்.

இதுவரை 200-க்கும் மேர்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில், அவர், வயது முதிர்ச்சி காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 83. அவருடைய மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜிக்கு மகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அவருடைய மறைவு குறித்து நடிகர் சிவகுமார்:

1965 ஏப்ரலில் ஜெயலலிதா அம்மையாரோடு முதல் ஜோடியாக ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்திலே கதாநாயகனாக நடித்தவன் ஸ்ரீகாந்த். ஈரோட்டிலே பிறந்த அவன் அமெரிக்கத் தூதரகத்திலே பணிபுரிந்தவன். கே.பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்தவர் வெங்கி என்கின்ற இந்த ஸ்ரீகாந்த்.

பாலசந்தருடைய மேஜர்காந்த் என்ற நாடகத்தில் ஸ்ரீகாந்த் என்ற பாத்திரத்தின் பெயரையே திரைப்படத்தில் அறிமுகமான போது தனக்குச் சூட்டிக்கொண்டான். நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தவர். வாலி கவிதை உலகிலே கரை கண்டவர். வறுமையின் கோரப்பிடியிலே சிக்கி வாலியும் நாகேஷும் துவக்க நாட்களிலே சாப்பாட்டுக்கு திண்டாட்டம் போட்ட காலத்தில் ஸ்ரீகாந்த் தன் கையால் சமைத்துப் போட்டு மாம்பலம் க்ளப் ஹவுசில் அந்த இருவரையும் காப்பாற்றியவர்.

கதாநாயகனாக சில படங்களில் நடித்தாலும் பின்னாளில் சிலநேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தனின் கதை, ராஜநாகம் போன்ற படங்களில் முத்திரைப் பதித்தவர். என்னோடு மதனமாளிகை, சிட்டுக்குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெட்கமில்லை, நவக்கிரகம் என பல படங்களில் நடித்தவர்.

சமீபத்திலே 80 வயது பூர்த்தியாகி விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஸ்ரீகாந்த், அவரது துணைவியார் லீலாவதி, மீரா அவர் கணவர் ஜாக் அலெக்‌ஸாண்டர் பேத்தி காவேரி ஆகியோரைச் சந்தித்து ஓவியம் சினிமா என்று இரண்டு Coffee Table புத்தகங்களை கொடுத்து வாழ்த்திவிட்டு வந்தேன்.

இன்று அந்த அற்புத கலைஞர் அமரராகி விட்டார் அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

முன்னதாக ஸ்ரீகாந்திக்கின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். அவருடைய இரங்கல் குறிப்பில், ‘பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். இயக்குநர் ஸ்ரீதரால் திரையுலகில் அறிமுகமாகி பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்கமுடியாத பல திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமின்றி அனைத்து வகையான பாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக அவர் திகழ்ந்துள்ளார்.

எங்கள் இல்லத்தின் அருகே வசித்தவர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன். பலமுறை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளேன். ஸ்ரீகாந்த்தை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.