‘தியாகராஜன் குமாரராஜாவை நீ வராதே என்று கூறிவிட்டேன்’ – டெவில் இசை வெளியீட்டில் இயக்குநர் மிஷ்கின்
மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”. சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
எழுத்தாளர் தேவி பாரதி பேசும் போது, “எனக்கு கொஞ்சம் உடல்நலம் சரியில்லை. நான் பல ஆண்டுகளாகவே இலக்கியத்தில் இருந்து வருகிறேன். நாவல், சிறுகதை, கட்டுரை போன்றவற்றை எழுதி இருக்கிறேன். காலச்சுவடு பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். இப்பொழுது உடல்நிலை சரியில்லை என்பதால் என்னால் அதிகமாகப் பேச முடியவில்லை. விரைவில் நான் உடல்நலம் சரியாகி வருவேன். அதற்குப் பிறகு திரைப்படங்கள் எனக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன். ” என்று பேசினார்.
இயக்குநர் மிஷ்கினுக்கு குருவாக இருந்து இசை கற்றுத் தரும் இசை மேதை பீம்சென் ஜோஷி அவர்களின் சிஷ்யரான 90 வயது நிரம்பிய இசை பண்டிதர் ராமமூர்த்தி அவர்கள் பேசும் போது, ”இன்று காலையில் கூட நாங்கள் இருவரும் சேர்ந்து இரண்டரை மணி நேரம் பயிற்சி செய்தோம். ஸ்வாதி சிந்து என்னும் ஒரு புதுவகையான ராகத்தை இரண்டு ராகங்களை கலந்து நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். நான் 53 வருட காலமாக குறைந்தது 10000 நபர்களுக்கு இசை கற்று கொடுத்திருப்பேன். சைந்தவி, விஜய் பிரகாஷ் ஆகியோர் எனது மாணவர்கள் தான்… ஆனால் என்னுடைய சிறந்த மாணாக்கன் என்றால் அது மிஷ்கின் என்று தான் சொல்வேன். ஏனென்றால் ஒரு நாளில் எட்டரை மணி நேரம் பயிற்சி செய்கிறான். நான் போன் செய்தால் பேசுவது இல்லை, அவன் பயிற்சி செய்யும் ஓசை தான் கேட்கிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் வேலை செய்தால், இசை தானாகவே வரும். அது மிஷ்கினுக்கு நடந்திருக்கிறது. என்னுடைய சிறந்த மாணவனின் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பேசினார்.”
இயக்குநர் வின்சென்ட் செல்வா பேசும் போது, “யூத் படப்பிடிப்பில் இருக்கும் போது மிஷ்கின் என்னை வந்து சந்தித்தார். அப்பொழுது அவர் ஒரு கேசட்டை கொடுத்தார், அந்த கேசட்டில் 15 டியூன்கள் இருந்தன. அதை கேட்கும் போது ராஜா சாரின் டியூன்கள் போலவே இருந்தது. இன்று டெவில் இசை வெளியீட்டில் கேட்ட பாடல்களும் இளையராஜா சாரின் பாடல்கள் போல் தான் இருக்கின்றது. மிஷ்கின் இளையராஜாவின் தீவிரமான ரசிகர். இசை குறித்த நல்ல ஞானம் மிஷ்கினுக்கு உண்டு. எந்த இடத்தில் இசை வரக்கூடாது என்பது எடிட்டர் லெனினுக்கு நன்றாகத் தெரியும். அவருக்கு அடுத்து அதை சரியாக புரிந்து வைத்திருப்பது மிஷ்கின் தான். அவரின் இந்த புதிய முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.” என்று பேசினார்.
இயக்குநர் பூ சசி பேசும் போது, நான் எப்பொழுதெல்லாம் ஆர்.ஏ.புரத்தை கடந்து செல்கின்றேனோ அப்பொழுதெல்லாம் மிஷ்கினின் அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். அப்படி போகும் போதெல்லாம் உடனடியாக மிஷ்கினை சந்தித்து விடுவேன். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் செல்லும் போது உதவி இயக்குநர்கள் என்னை வழக்கத்திற்கு மாறாக காத்திருக்கச் சொன்னார்கள். சிறிது நேரம் கழித்து மிஷ்கினின் அறைக் கதவை திறக்கும் போது உள்ளிருந்து தபேலா இசைக்கும் சத்தம் வந்தது. நான் மிஷ்கினை இவனுக்கு என்ன ஆயிற்று என்பது போல் தான் பார்த்தேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.
இயக்குநர் கருணாகரன் பேசும் போது, நானும் இயக்குநர் கதிர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவன் தான். இப்படி ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை நான் பார்த்ததே இல்லை. இசையமைப்பாளரே தன் திறமையை நம் கண்முன் நிருபித்திருக்கிறார். இப்படம் வெற்றி அடைய வேண்டும் என்று படத்தின் இயக்குநர் ஆதித்யா மற்றும் இயக்குநர் மிஷ்கின் ஆகியோருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.
இயக்குநர் அருண் மாதேஷ்வரன் பேசும் போது, “மிஷ்கின் அவர்களின் திரைப்படங்களில் வரும் பின்னணி இசையே எந்தவித சாயலும் இன்றி ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். அப்படித்தான் அவர் இப்பொழுது இசை அமைத்து இருப்பதும், வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஒரு தனித்துவம் அதில் தெரிகிறது. எனக்கு அதிகமாக பேச வராது. இசையமைப்பாளராக மிஷ்கின் அவர்கள் வெற்றி பெறுவதற்கும், இயக்குநராக ஆதித்யா வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசினார்.
அது போல் உலகளவில் சார்லி சாப்ளின், வூடி ஆலன், க்ளைண்ட் ஈஸ்ட்வுட் மற்றும் டேவிட் லின்ச் போன்ற இயக்குநர்கள் இசையமைப்பாளராகவும் மாறி இருக்கிறார்கள். அது ஒரு நீட்சி என்றே நான் கருதுகிறேன். அது போல் இயக்குநர் ஆதித்யாவின் சவரக்கத்தி படத்தில் ஒரு பைத்தியமாக நடித்தேன். டெவில் படத்தில் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பாதிரியார் ஆக நடித்திருக்கிறேன். இரண்டு கதாபாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் நான் திருமணம் செய்து வைத்தப் பின்னர் தான் இந்த கூத்தெல்லாம் நடக்கிறது என்பதைப் பார்க்கும் போது குற்றவுணர்வாக இருக்கிறது. ஆதித்யா மிஷ்கினின் தம்பி என்பதற்காக இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் வரைக்கும் ஆதித்யா மிஷ்கினின் தம்பி என்பதே எனக்குத் தெரியாது. இது அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ”என்று பேசினார்.
”டெவில்” படத்தின் தயாரிப்பாளர் இராதாகிருஷ்ணன் பேசும் போது, “இந்த இசை வெளியீட்டிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கங்கள். இந்தப் படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என்று எண்ணிணோம். ஆரம்ப காலகட்டங்களில் பாய் என்பவரும் பின்னர் எங்கள் நண்பர் ஹரியும் எங்களோடு இணைந்ததால் இப்படத்தை சிறப்பாக தயாரித்துள்ளோம். இசை அமைக்க ஒத்துக் கொண்ட இயக்குநர் மிஷ்கினுக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
மற்றொரு தயாரிப்பாளர் ஹரி பேசும் போது, “இப்படம் லவ் டுடே” போல் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம். கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறோம். ஆதரவு அளியுங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகி முரளி பேசும் போது, “மிஷ்கின் சாரின் திரைப்படங்களின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் இந்திய திரைப்படங்களுக்கான மரியாதை உயர்ந்து வருகிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் வசந்த் ரவி பேசும் போது, இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. நான் இங்கு வந்திருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். அது மிஷ்கின் சார் மீது எனக்கு இருக்கும் அன்பு தான். அவர் எப்போதுமே மனதில் இருந்து பேசுவார். உண்மையாக என்ன நினைக்கிறாரோ அதை மட்டுமே பேசுவார். இந்த நட்பு, தரமணி படத்தின் படப்பிடிப்பின் போது துவங்கியது. ராக்கி படத்தில் அவரோடு இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. கடைசி நிமிடத்தில் அது நடக்கவில்லை. கூடிய விரைவில் இருவரும் சேர்ந்து நடிப்போம் என்று நம்புகிறேன். இது போன்ற அன்புடன் கூடிய அண்ணன் தம்பியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசிய இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “எல்லாக் கதைகளும் ஒரே கதைகள் தான், “டெவில்” படத்தின் கதையும் அதே தான். ஒரு அமைதியான வீட்டிற்குள் கருப்பு உள்ளே வரும். வீடு சின்னாபின்னமாகி சிதிலம் அடையும்,. மீண்டும் அது புத்துயிர் பெற்று துளிர்க்கும். அன்னா கரீனா தொடங்கி எல்லாவற்றிலும் கதை இதுதான். நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன் அல்ல; ஆனால் பைபிளை பலமுறை படித்திருக்கிறேன். இப்பொழுதும் இயேசு கிறிஸ்து என் பின்னால் நிற்பதைப் போல் உணர்கிறேன். நானும் சிலுவையில் தொங்குபவன் தான். இப்படத்தில் சில பாடல்களை முயற்சித்து இருக்கிறேன்.
நான் அடிக்கடி என் உதவி இயக்குநர்களிடம் சொல்லும் வார்த்தை, இந்த உலகில் மிக முக்கியமானதாக நான் கருதுவது, ஒரு பேனாவையும் பேப்பரையும் தான். அதனால் தான் எழுத்தாளர் ஜெயமோகனை முதலில் பேச அழைத்தேன். இன்று எனக்கு கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானி இசையும் கற்றுத் தரும் ராமமூர்த்தி எனக்கு ஒரு குருநாதர் என்றால், எனக்கு இன்னொரு குருநாதரும் இருக்கிறார். அவர் இளையராஜா, அவர் கால்களில் விழுந்து வணங்குகிறேன். ஒரு எட்டு வயதாக இருக்கும் போது என் தந்தையின் தோள்களில் அமர்ந்து சவாரி செல்லும் போது, ‘அன்னகிளியே உன்னத் தேடுதே…” பாடலைக் கேட்டு என் அப்பனின் தலைமுடியைப் பற்றி இழுத்து நிறுத்தி அப்பாடலைக் கேட்டேன். அன்று முதல் அவர் எனக்கு குருநாதர் தான். பின்னர் ஏன் இசையமைக்க வந்தாய் என்று கேட்கிறீர்களா..? அவருடன் சண்டை போட்டுவிட்டேன்.. எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். மீண்டும் அவரிடம் போய் நிற்க முடியாது. மேலும் மிகவும் போர் அடிக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் தான் இசையமைக்க முடிவு செய்தேன். இந்த இசை பயணத்தின் மூலம் நான் எந்த இடத்திற்கும் சென்று சேர விரும்பவில்லை. அப்படி நான் சென்று சேரும் இடம் என்று ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் காலடிகள் தான். இந்த உலகின் மிகப்பெரும் இசை ஆளுமைகள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும். அவர்கள் தான் இசையமைப்பாளர்கள். நான் அல்ல.
ஒரு தாய் குழந்தையைப் பெற்று வெளியே போடுகிறாள். ஆனால் ஒரு இயக்குநரோ அக்குழந்தையை எடுத்து தனக்குள்ளே விட்டுக் கொள்கிறான். அப்படி என்னை செதுக்கிய இயக்குநர்கள் இருவர். ஒருவர் கதிர், மற்றொருவர் வின்சென்ட் செல்வா. இருவருமே என்னுடைய குருநாதர்கள் தான். அவர்களிடம் இருந்து தான் நாங்கள் உருவாகி இருக்கிறோம். அவர்களுக்கு நன்றி. அது போல் தயாரிப்பாளர் தாணு அவர்களும் என் மீது அதீத அக்கறையும் பாசமும் கொண்ட ஒரு குருநாதர் தான். அவருக்கும் என் நன்றி.
இவர்களுக்கு அடுத்ததாக என் வளர்ச்சியின் மேல் எப்பொழுதுமே அக்கறை கொண்டு என்னை பாசத்தோடு அழைத்துக் கொள்பவர்கள் இயக்குநர் சசியும், தெலுங்கு படங்களை இயக்கி வரும் இயக்குநர் கருணாகரனும் அவர்களுக்கும் நன்றி.
ஒரு படம் வெளியாகி, அது ரசிகர்களால் அமோகமாகப் போற்றப்பட்டு, அதன் 11ம் நாள் அப்படத்தை காண கிருஷ்ணவேனி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினார்கள். இது ஐரோப்பிய நாடுகளில் தான் வழக்கம். ஆனால் அதே மரியாதையை இங்கு ஒரு மகத்தான கலைஞனுக்கு மக்கள் கொடுத்தார்கள். என் சமகாலத்து இயக்குநரான பாலா தான் அவன். இந்த நிகழ்விற்கு வந்து சிறப்பித்த இயக்குநர் பாலாவிற்கு நன்றி. அவர் கூறலாம் என் முன் அவர் ஒன்றும் இல்லை என்று. ஆனால் உண்மை அவர் முன் நான் ஒன்றும் இல்லை என்பதே.
சினிமாவில் சிலர் கூறுவார்கள் அதிர்ஷ்டத்தால் ஜெயித்து விட்டான் என்று. இவர்களைப் பொறுத்தவரை சோவிகளை குலுக்கிப் போட்டால் உடனே தாயம் விழுந்துவிடும், பூவா தலையா என்று சுண்டினால் உடனே பூ விழுந்து விடும் என்று நினைக்கிறார்கள். வெற்றி அவ்வளவு எளிதானது அல்ல. தன் வாழ்நாள் முழுக்க, 24 மணி நேரமும் சினிமா, சினிமா, சினிமா என்று ஓடிக் கொண்டிருக்கும் மகத்தான இயக்குநர் அல்ல, மகத்தான கலைஞன் அவன். அவன் தான் என் நண்பன் வெற்றிமாறன். அவனுக்கு கிடைத்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் அவனது அசராத உழைப்பும் ஆழ்ந்த் அறிவும் தான். விழாவை சிறப்பித்தமைக்காக வெற்றிக்கு நன்றிகள்.
ஒரு இரண்டு நபர்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். ஒருவன் என் நண்பனும், உலகத்தில் இருக்கும் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவனும் ஆன ராம். அவனுக்கு அங்கு ‘ஏழு கடல்’ திரைப்படத்தின் பணிகள் இருப்பதால் கிளம்பி வர முடியாமல் கையில் தம்மைப் பிடித்துக் கொண்டு தத்தளித்துக் கொண்டு இருப்பான்., இன்னொருவன் தமிழ் சினிமாவின் மற்றொரு மகத்தான கலைஞனான தியாகராஜன் குமாரராஜா. முதலில் வருகிறேன் என்று சொன்னவன், அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்து ஒன்னு சொல்லணும் என்றான்… என்ன நீ இசை வெளியீட்டிற்கு வரவில்லை அதுதானே…? என்றேன்… ஆமாம் வரவில்லை எனென்றால் என்று முடிப்பதற்குள் “உனக்கு சங்கோஜமாக இருக்கிறது” அதுதானே என்று கேட்டேன்… ஆமாம். தேங்க்ஸ்டா என்றவன், நான் கண்டிப்பாக வர வேண்டும் என்று நினைத்தால் சொல். நான் வருகிறேன் என்றான். நான் நீ வராதே என்று கூறிவிட்டேன். அவன் ஒரு பூவைப் போல மென்மையானவன். அவன் இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டு தான் இருப்பான் என்று நம்புகிறேன்.
இரத்தம் மற்றும் கொலைகளில் நன்கு உள்ளீடாகச் சென்று அதில் வேறொரு பரிமாணத்தை தேடுபவன் அருண் மாதேஸ்வரன். அவன் ராக்கி கதையை என்னிடம் சொல்ல வந்தபோது, “நீங்கள் ஒருவனை புல்டோசரால் தரையோடு தரையாக நசுக்கி, அவனை சுரண்டி எடுத்து மீனுக்கு உணவாக போடுகிறீர்கள் என்றான். உனக்கு ப்ரைட் ஆன எதிர்காலம் இருக்கிறது என்று ஆசி வழங்கினேன். டக்காஸி கிட்டானோவைப் போல் ஒரு வன்முறையை அதன் உச்சத்தை அழகியலோடு காட்சிப்படுத்த முடியாது. அவரிடம் டொரொண்டினோ பற்றி கேட்ட பொழுது “அவர் ஸ்டெமினா இல்லை” என்று பதிலளித்ததாகச் சொல்வார்கள். ஆனால் நம் அருண் மாதேசிடம் அந்த திறமை இருக்கிறது. அழகியலும் வன்முறையும் ஒன்றாக அவருக்கு கை வருகிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.
ஒரு கலைஞன் என்பவன் தன்னை குறித்தான விமர்சனங்களை கூர்மையாக கவனிப்பவனாக இருக்க வேண்டும். அதை அலசி ஆராய்ந்து அதில் உண்மைகள் இருப்பின் அவற்றை திருத்திக் கொள்ள முன் வரவேண்டும். அந்த வகையில் என்னையும் என் படைப்புகளையும் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் இசை விமர்சகர் ஷாஜிக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் இரு நாடுகள் அடித்துக் கொள்கின்றன. மதம் அரசியல் கட்சி இரண்டும் ஒன்று தான். தினம் தினம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். இப்படி இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளும் நம்மை ஒரு குழந்தையை பாதுகாப்பது போல் பாதுகாப்பவர்கள் கவிஞர்கள் தான். அவர்களுக்கு நன்றி. அது போல் இப்படத்திற்கு கொடையாளிகளாக வந்து இப்படத்தை சிறப்பாக தயாரிக்க உதவி இருக்கும் தயாரிப்பாளர் தரப்பிற்கு நன்றி.
நடிகர் விதார்த் திரைப்பட்டறையில் வார்த்து எடுக்கப்பட்ட நடிகன். அவனுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. தமிழில் சிறு சிறு வேடங்களில் நடித்துவிட்டு தற்போது தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வரும் அருணுக்கும் நன்றி. வசந்த் ரவி இன்னும் ஒரு 15 ஆண்டுகளுக்கு கண்டிப்பாக தமிழ் சினிமாவில் இருப்பான்..
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி சார் நாங்கள் சிறுவயதில் பார்த்து வியந்த ஒரு ஆளுமை. ஆரி 2 கேமராவில் தான் எடுத்திருப்பார். ஆனால் அது ஏதோ Pana Visionல் எடுக்கப்பட்டது போலத்தான் இருக்கும். அவர் எங்கள் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன். அவரிடம் ஒரு கோரிக்கை. ஜூனியர் ஆர்டிஸ்டுகளில் 25 நபர்களுக்கு ஒரு திருநங்கை என்கின்ற ரீதியில் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதற்கான ஆவணங்கள் செய்து தரும் படி கேட்டுக் கொள்கிறேன். பெற்றோர்களை பாராட்டுவது, உடன் பிறந்தவர்களைப் பாராட்டுவது என்பது சங்கோஜமான காரியம். என் தம்பி என்னிடம் உதவி இயக்குநராக வேண்டும் என்று வந்த போது மிக கேவலமாக அவனிடம் நடந்து கொண்டேன். செருப்பை தூக்கி எறிந்தேன்… பின்னர் இரண்டு வருடம் பார்த்திபனிடம் பணியாற்றி விட்டு என்னிடம் வந்தான். ஏற்றுக் கொண்டேன்.
ஒரு படம் இயக்குநரின் உழைப்பும் அறிவும் வெளிப்படையாக தெரிவது போல் இருந்தால் மட்டுமே அப்படம் ஓடும். இல்லை என்றால் அது எப்பேர்ப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் ஓடாது. அதை மக்கள் நிராகரித்து விடுவார்கள். படத்தை பாருங்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கிப் போடுங்கள். அவன் மீண்டும் அதைவிட நல்ல கதையோடு உங்களைத் தேடி வருவான். படம் நன்றாக இருந்தால் கொண்டாடுங்கள், ஆதரவு தாருங்கள்“ என்று பேசினார்.
Trailer Link ▶️ https://youtu.be/JN_LrGSsS7Y