Site icon Chennai City News

அரசியல் நிலைப்பாடு :சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த்தின் நீண்ட அறிக்கை!

அரசியல் நிலைப்பாடு :சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த்தின் நீண்ட அறிக்கை!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளதாக ஒரு நீண்ட அறிக்கை ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்கு கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ந் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.

இந்த கொரோனா பிரச்சினையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை.

2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத நிலையில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், ‘கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது, வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா? என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது 70. உங்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால் இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.

எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்து தான் கவலை. நான் தொடங்குவதோ புது கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக்கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்.

இதை இப்போதே சொல்ல காரணம், என்னை ஆதரிப்போரின் மத்தியில் நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், இந்த கொரோனா பிரச்சினை தொடரும் நிலையில், கடைசி நேரத்தில் இந்த காரணங்களை காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.

நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ந் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.

எனவே அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, என் உடல்நலத்தில் அக்கறையுள்ள என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய ரசிகர்களும், மக்களும் என்னை என்ன முடிவு எடுக்க சொன்னாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். மக்கள் தீர்ப்பே. மகேசன் தீர்ப்பு.

வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!! அன்புடன் ரஜினிகாந்த். இவ்வாறு அந்த அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த அறிக்கை உண்மையானால் அவரின் அரசியல் நுழைவு மற்றும் புதிய கட்சியைத் தொடங்குவது மிகவும் சந்தேகத்திற்குரியது என கூறப்பட்டது.

ஆனால் அறிக்கை அவரது இல்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ள என் உடல் நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என கூறி உள்ளார்.

இது கொரோனா காலம் மற்றும் அவரது உடல்நலம் காரணமாக கடுமையான பொது சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்காததால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை, அவரது அரசியல் நுழைவு மற்றும் புதிய கட்சி தொடங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதை உறுதிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தனது அறிக்கை இல்லை என ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

எனது அறிக்கைப்போல ஒரு கடிதம் சமூக வலைதளத்தில் பரவிக்கொண்டு இருக்கிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.

இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என கூறி உள்ளார்.

Exit mobile version