நிறைவேறியது 18 ஆண்டு கனவு – பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி
இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியானது நேற்று ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்களையும், ரஜத் பட்டிதார் 26 ரன்களையும் குவித்தனர். பஞ்சாப் அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜேமிசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஆர்.சி.பி அணி சார்பாக புவனேஸ்வர் குமார் மற்றும் க்ருனால் பாண்டியர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றுள்ளது.
ஐபிஎல் கோப்பையில் 8வது அணியாக இனிமேல் தன்னுடைய பெயரையும் ஆர்சிபி அணி பொறித்து வரலாற்றில் இடம் பிடித்தது. ராகுல் திராவிட், அணில் கும்ப்ளே, விராட் கோலி, டூப்ளெஸ்ஸி என ஜாம்பவான்களால் நிகழ்த்த முடியாத சாதனையை அன்கேப்டு, சர்வதேச அனுபவமே இல்லாத வீரர் ரஜத் பட்டிதார் ஆர்சிபிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக ஆடி 10 ஆண்டுகள் கேப்டன் பொறுப்பேற்று பலமுறை இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்ட விராட் கோலிக்கு இந்த வெற்றியின் ஆழம், மதிப்பு என்னவென்று தெரியும். அதனால்தான் கடைசிப் பந்து வீசப்பட்டவுடன் மைதானத்தின் தரையில் தலை கவிழ்ந்து கோலி தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கண்ணீர் சிந்தி அழுதார்.
இதுபோல் விராட் கோலியை அதீத உணர்ச்சியுடன் ரசிகர்கள் பார்த்தது இல்லை. 18 ஆண்டுகள் கனவு நனவாகும்போது ஏற்படும் மகிழ்ச்சி, உழைப்பின் மதிப்பு, அர்ப்பணிப்பின் பலன் அனைத்தும் கண்ணீராக கோலியின் முகத்தில் வெளிப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பெங்களூரு அணி பெற்ற இந்த வெற்றி குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி எனக்கு மட்டும் ஸ்பெஷலானது கிடையாது. விராட் கோலிக்கும் இந்த வெற்றி மிகவும் ஸ்பெஷலான ஒன்று. இத்தனை ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கும் இந்த வெற்றி மகிழ்ச்சி அளித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நாங்கள் இந்த இறுதிப்போட்டியில் வெற்றிபெற முடியும் என்கிற நம்பிக்கை வந்தது. இந்த போட்டியில் 190 ரன்கள் என்கிற இலக்கு நிச்சயம் போதும் என்று நினைத்தோம். அதேபோன்று எப்போதெல்லாம் விக்கெட் தேவைப்படுகிறதோ, அழுத்தம் நிறைகிறதோ அப்போதெல்லாம் க்ருனால் பாண்டியாவை பந்துவீச அழைப்பேன். அந்த வகையில் அவர் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
அவர் மட்டுமின்றி சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசல்வுட் என அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். விராட் கோலி அணியில் இருக்கும் போது நான் கேப்டன்சி செய்கையில் அவரிடம் இருந்து நிறைய அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.