10 ஆண்டுகளை நிறைவு செய்யும் சென்னை மெட்ரோ ரயில்…. 39 கோடி முறை பயணம் செய்த பயணிகள்!
சென்னையின் அடையாளமாக மாறியுள்ள சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வரும் 29 ம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞரின் முயற்சியால் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் பணிகள் கடந்த 2015 ம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது.
முதல் மெட்ரோ சேவை விமான நிலையம் – விம்கோ நகர் , சென்ட்ரல் – பரங்கிமலை இடையே 2 வழித்தடங்களில் 55 கி.மீ தொலைவிற்கு இயங்கியது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் எளிதாகவும் குறைந்த நேரத்தில் பயணம் செய்யும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை இருப்பதால் மேலும் 3 வழித்தடங்களில் 118 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் 2 ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை சராசரியாக 39 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் மாதந்தோறும் பயணிப்போரின் எண்ணிக்கை 1 கோடியை விரைவில் தொடும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதே போல மீதமுள்ள மெட்ரோ பணிகளும் நிறைவடைந்தால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.