தாம்பரம் விமானப்படை தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் நிறைவு இந்திய விமானப்படையின் சேவை உலக நாடுகளுக்கும் தேவைப்படுகிறது: விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் பேச்சு!
சென்னை: இந்திய விமானப்படையின் சேவை, இந்தியாவில் மட்டும் அல்ல, வெளிநாட்டிலும் தற்போது தேவைப்படுகிறது. குறிப்பாக பேரிடர் காலங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு நாங்கள் எப்போதும் முதன்மையாக இருப்போம் என இந்திய விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையின் 92ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வுகளும் மற்றும் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இந்நிகழ்வில் இந்திய ராணுவத்தின் முப்படையின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் இந்திய விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் உள்ளிட்ட முக்கிய ராணுவ உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திய விமானப்படை வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபடும்போது கடும் வெயிலின் தாக்கத்தால் 5 விமானப்படை வீரர்கள் மயக்கம் அடைந்தனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் கப்பல்களை மீட்கும் பணிகளிலும், மற்ற நாடுகளுக்கு உதவி செய்வதிலும் இந்திய விமானப்படை சிறப்பாக பங்காற்றியுள்ளது.
பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த சாகசங்கள்: விமானப்படையின் மூன்று சேத்தக் விமானம், இந்திய விமான படையின் கொடியை வானில் பறக்க விட்ட படி பறந்து அணி வகுப்பு நிகழ்ச்சி தொடங்கியது. 3 பிலாடஸ் பிசி-7 விமானம் வானில் பறந்து காட்சியளித்தது. சுகோய்-30 எம்கேஐ சோழா 950 கிமீ வேகத்தில் வானில் சீறி பாய்ந்தும் வானில் அதன் வேகத்தையும் திறன்களையும் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தியது.
20ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் நடைபெற்ற விமானப்படையின் வான் சாகச நிகழ்வு எதிர்கால தலைமுறையினருக்கான உந்துகோல்.