Site icon Chennai City News

சேலம் மாவட்டத்திற்கு 6 புதிய திட்டங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு என்ன?

சேலம் மாவட்டத்திற்கு 6 புதிய திட்டங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு என்ன?

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 1649.18 கோடி ரூபாய் மதிப்பிலான 225 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 509 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,01,203 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்வில் சேலம் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

முதலாவது அறிவிப்பு : சேலம் மாநகராட்சி பகுதிகளில், 100 கோடி ரூபாய் செலவில் சாலைகள் மேம்பாடு, போதிய கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இரண்டாவது அறிவிப்பு : சேலம் மாநகராட்சி செவ்வாய்ப்பேட்டையில் இருக்கும் தினசரி சந்தை 9 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

மூன்றாவது அறிவிப்பு : தலைவாசல் வட்டத்தில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இலுப்பநத்தம் கிராமத்தில் இருக்கும் வேளாண் விற்பனை நிலையம் 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும்.

நான்காவது அறிவிப்பு : மேட்டூர் மற்றும் நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு : சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.

ஆறாவது அறிவிப்பு : தாரமங்கலம் நகராட்சியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் இடைப்பாடி நகராட்சியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் ஆத்தூரில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய குடிநீர்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Exit mobile version