Site icon Chennai City News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள்: முகூர்த்த கால் ஊன்றி தொடக்கம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள்: முகூர்த்த கால் ஊன்றி தொடக்கம்

மதுரை: தமிழகத்தின் முதல் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி முகூர்த்த கால் நட்டு தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறுரம் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த காளைகள் பங்கேற்பதால் இந்த போட்டிகள் உலக புகழ்பெற்றதாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நாளில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

இந்த ஆண்டு, இந்த போட்டி, வரும் ஜனவரி 14-ம் தேதி நடக்கிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல், பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள், மாடு சேகரிக்கும் இடம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா இன்று நடந்தது. மேயர் இந்திராணி தலைமை வகித்தார். ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.

மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மேயர் இந்திராணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி வைஷ்ணவி பால், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் அவர்கள், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, முகூர்த்த கால் நட்டு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை தொடங்கி வைத்தார்.

Exit mobile version