மனிதர்கள் சினிமா விமர்சனம்

0
255

மனிதர்கள் சினிமா விமர்சனம் : நுனியில் அமர வைக்கும் திரில்லர் – புதிய குழுவின் புது முயற்சி | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் :
கபில் வேலவன் – கார்லி
தக்ஷா – சதீஷ்
குணவந்தன் – மனோ
அர்ஜுன்தேவ் சரவணன் – தீபன்
சாம்பசிவம் – சந்ரு
படக்குழுவினர்:
இயக்குனர் – ராம் இந்திரா​
தயாரிப்பு – Studio Moving Turtle & Sri Krish Pictures
தயாரிப்பாளர்கள் – ராஜேந்திர பிரசாத், ஜே நவீன் குமார், சாம்பசிவம் எம் கே
இணை தயாரிப்பாளர்கள் : தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், யுவராஜ்
ஒளிப்பதிவு – அஜய் ஆபிரகாம் ஜார்ஜ்
படத்தொகுப்பு – டின்சா
இசை – அனிலேஷ் எல் மேத்யூ
கூடுதல் பின்னணி ஸ்கோர் – ஜான் ராபின்ஸ்
கலை இயக்கம் – மகேந்திரன் பாண்டியன்
பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா
பாடியவர் – கபிலன் கபிலன்
ஒலிக்கலவை – ஆனந்த் ராமச்சந்திரன்
ஒப்பனை கலைஞர்- சபிரிகிரிசன்
டிஐ – வசந்த் எஸ் கார்த்திக்
ஸ்டண்ட் – வின் வீரா
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (​A​IM)

ஆறு நண்பர்கள் கார்லி (கபில் வேலவன்), சதீஷ் (தக்ஷா), மனோ (குணவந்தன்), தீபன் (அர்ஜுன்தேவ் சரவணன்), சந்திரு (சம்பாசிவம்) மற்றும் பிரேம் ஆகியோர் நள்ளிரவில் சாலையோரத்தில் உள்ள ஒரு மரத்தடியில் மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள். குடிபோதையில், அவர்களுக்கு​ கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, திடீரென்று சண்டை ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். இதில், மது பாட்டிலால் குத்தப்பட்டு எதிர்பாராத விதமாக பிரேம் இறந்துவிடுகிறார். குடிபோதையில் இருந்த மற்ற ஐந்து நண்பர்களும் எழுந்து, தங்கள் நண்பர் பிரேம் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். பயத்திலும் பீதியிலும், தங்கள் நண்பரின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் போராடுகிறார்கள், ஆனால் அதே நேரத்தில், காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்க, தங்கள் நண்பர் கார்லியின் ஆலோசனையின்படி அவரது உடலை அப்புறப்படுத்த முடிவு செய்கிறார்கள். பிரேமின் உடலை தங்கள் காரின் டிக்கியில் மறைத்து வைத்துவிட்டு, நடு இரவில் பயந்தும் பதட்டத்துடனும் ஓட்டிச் செல்கிறார்கள். நள்ளிரவில் அவர்கள் செல்லும் வழியில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, இறுதியில் யாருக்கும் தெரியாமல் தங்கள் நண்பனின் உடலை ஒரு அந்நிய ஊரில் புதைக்க ஒரு குழி தோண்டி எடுக்கிறார்கள். அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இறந்து விட்டதாக கருதப்பட்ட தங்கள் நண்பன் இருளில் நகர்வதைக் கண்டு ஐந்து பேரும் அதிர்ச்சி அடைகிறார்கள். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவரைக் காப்பாற்ற முடியும் என்று மூன்று நண்பர்களும் கூறுகிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவன் இறந்தால், அது அனைவருக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும், அதனால் அவனைக் கொன்று விடலாம் என்றும் கார்லி கூறுகிறான். மீண்டும் அவர்களுக்குள் அங்கே மோதல் ஏற்பட்டு சண்டை தீவிரமடைகிறது. இறுதியில் அங்கே என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

கார்லி (கபில் வேலவன்), சதீஷ் (தக்ஷா), மனோ (குணவந்தன்), தீபன் (அர்ஜுன்தேவ் சரவணன்), சந்திரு (சம்பாசிவம்) ஆகிய ஐந்து பேரும் தங்களுடைய கதாபாத்திரத்தில் அதீத போதையில், குற்றவுணர்வு, அழுகை, பதற்றம், குழப்பம், பயம், நிதானம் என அனைத்தையும் உடல் மொழி மூலம் ஒவ்வொருவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர், மற்றும் பிரேம் ஒரு சடலத்தின் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

முழுக்க ஓர் இரவில் நடக்கும் கதைக்களத்தில், பெரும்பாலும் காருக்குள்ளேயே நகரும் கதைக்கு அட்டகாசமான காட்சி கோணங்கள் மற்றும் ஒளி அமைப்பு, மற்றும் இயக்கம் உணர்வை உருவாக்க நகரும் வாகனங்களிலிருந்து கார் ஹெட்லைட் ஒளித் தடங்களை பயன்படுத்திய காட்சிகள் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ் கவனம் பெறுகிறார்.

படம் முழுவதும் பதற்றத்துடன் விறுவிறுப்பை கூட்டி கடைசி வரை அடுத்து என்ன நடக்கப்போகிறது என திகிலுடன் பயணப்பட செய்துள்ளார் படத்தொகுப்பாளர் தின்சா. அதை அனிலேஷ் மாத்யூ இசை மற்றும் பின்னணி இசையால் பரபரப்பு குறையாமல் வலு சேர்த்துள்ளார்.

ஒரு இரவு, ஆறு நண்பர்கள், மது போதை, உணர்ச்சியைத் தூண்டும் தேவையற்ற வார்த்தையால் ஏற்படும் எதிர்பாராத சம்பவம் மற்றும் அதன் பின்விளைவுகள் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திரைக்கதையுடன், ஒரு இரவு பின்னணியில் புதுமுகங்களுடன் பார்வையாளர்களை பதட்டமாக வைத்திருக்கும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை அறிமுக இயக்குனர் ராம் இந்திரா உருவாக்கியுள்ளார்.

மொத்தத்தில் ​Studio Moving Turtle & Sri Krish Pictures     சார்பில் ராஜேந்திர பிரசாத், ஜே நவீன் குமார், சாம்பசிவம் எம் கே இணைந்து தயாரித்திருக்கும் மனிதர்கள் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திரில்லர் – புதிய குழுவின் புது முயற்சி.