குட் டே (GOOD DAY) சினிமா விமர்சனம்

0
430

குட் டே (GOOD DAY) சினிமா விமர்சனம் : குட்டே நகைச்சுவையுடன் நல்ல மெசேஜை வெளிப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு படம் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் :
பிரித்திவிராஜ் ராமலிங்கம் – சாந்தகுமார்
கார்த்திக் நேத்தா – மாடர்ன் சாமி
காளி வெங்கட் – நேரு​
மைனா நந்தினி – கிருஷ்ண வேணி
ஆடுகளம் முருகதாஸ் – கிருஷ்ண வேணி கணவர்
பகவதி பெருமாள் (பக்ஸ்) – சுல்தான் பேட்டை
வேல ராமமூர்த்தி – வெட்டியான் தவவேலு
போஸ் வெங்கட் – பஸ் கண்டக்டர்
விஜய் முருகன் (கலை இயக்குனர்) – போலீஸ் இன்ஸ்பெக்டர் மது தயாளன்
ஜீவா சுப்பிரமணியம் – போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரித்தியங்கரா தேவி
பாரத் நெல்லையப்பன்

படக்குழுவினர் :
தயாரிப்பு நிறுவனம் : நியூ மாங்க் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : பிரித்திவிராஜ் ராமலிங்கம்
இயக்குனர் : என்.அரவிந்தன்
திரைக்கதை – வசனம் : பூர்ணா ஜெஸ் மைக்கேல்
ஒளிப்பதிவு – படதொகுப்பு : மதன் குணதேவ்
பாடலாசிரியர் – கூடுதல் வசனம் : கார்த்திக் நேத்தா
இசை : கோவிந்த் வசந்தா
கதை கரு : பிரித்திவிராஜ்  ராமலிங்கம்
இணை இயக்குனர் : பூர்ணா ஜெஸ் மைக்கேல்
சவுண்ட் டிசைன் : எஸ்.அழகிய கூத்தன், சுரேன்.ஜி
சவுண்ட் மிக்ஸிங் : சுரேன்.ஜி
ஸ்டண்ட் இயக்குனர் : ஓம் பிரகாஷ்
டைட்டில் ரிவீல் – டீஸர் – ட்ரைலர் இசை : லியோன் – டார்வின்
துணை இயக்குனர் : சே மதன்
நிர்வாக தயாரிப்பாளர் : கோவை வி.விஜய குமார்
நிர்வாக மேலாளர் : தனசேகர்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
ஸ்டில்ஸ் : ஜீவா சுப்பிரமணியம் – மக்கா பகத் – மணிகண்டன்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் : சபா டிசைன்ஸ்
லைன் தயாரிப்பாளர் : ஜே பாண்டியராஜ் – தாமோதரன் வீரகுமார்

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில், பிரபல தயாரிப்பாளர் S.R பிரபு இப்படத்தை வெளியிடுகிறார்.

சாந்தகுமார் (பிரித்திவிராஜ் ராமலிங்கம்) மனைவி மற்றும் பெண் குழந்தையை தனது சொந்த ஊரில் விட்டு, திருப்பூரில் பனியன் கம்பெனி  ஒன்றில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். அங்கு நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கி வருகிறார். அங்கு அவசரத்துக்கு சக நண்பர்கள் உதவி கிடைக்கவில்லை.  வேலை பார்க்கும் இடத்தில் சக தொழிலாளி பெண்ணிடம் அத்துமீறும் மேலாளரை கண்டித்ததால் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்கிறார். இதனால் அவருக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. மேலும் இந்த பிரச்சனை காரணமாக, மேலாளர் அந்த பெண் மற்றும் பனியன் கம்பெனி முதலாளி கண் முன் சாந்தகுமாரை அறைந்து விடுகிறார். அன்றைய தினம் அவருக்கு பிறந்தநாள் வேறு. பிறந்த நாளன்று அவமானத்துடன் செல்லும் சாந்தகுமாருக்கு அன்றே சம்பளம் கிரெடிட் ஆகிறது. பாதி சம்பளத்தை மனைவிக்கும், ஒரு குறிப்பிட்ட தொகையை தன் அம்மாவுக்கு அனுப்பி வைக்கிறார். தன்  அம்மாவுக்கு பணம் அனுப்புவது ஊரில் இருக்கும் மனைவிக்கு பிடிப்பதில்லை. அதனால் கைபேசியில் தொடர்பு கொள்ளும் போது அவரது மனைவி சண்டை போடுகிறார். இந்நிலையில் கையில் உள்ள மீதி சம்பள பணத்தை எடுத்துக் கொண்டு மது அருந்த மதுபான கடைக்கு சாந்தகுமார் செல்கிறார். நிதி நெருக்கடி, பணி செய்யும் இடத்தில் ஏற்பட்ட அவமானம் மற்றும் குடும்பத்தை நினைத்து ஏற்படும் பதட்டங்களால் சோகத்தில் மது குடிக்கும் சாந்தகுமார் திடீரென்று தன் தனது பழைய கல்லூரி தோழி வேணியுடன் (மைனா நந்தினி) தனது பிறந்தநாளை கொண்டாட, கேக் வாங்கிக்கொண்டு வேணியின் வீட்டுக்கு சென்று அவளது கணவர் (ஆடுகளம் முருகதாஸ்) முன் பிரச்சினையில் ஈடுபட்ட, பின் ஒரு பாலத்தின் மீது நின்று கொண்டு தற்கொலைக்கு முயற்சிக்கும் போது ரோந்து பணியில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மது தயாளனிடம் (விஜய் முருகன்) சிக்கி காவல் நிலையம் அழைத்து வரப்படுகிறார். காவல் நிலையத்தில் ஒரு குழந்தை காணாமல் போன புகாரில் போலீசார் தீவிரம் காட்டி பரபரப்பாக ஈடுபட்டிருந்த போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் மது தயாளனின் சீருடை மற்றும் வாக்கி டாக்கியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடுகிறார் சாந்தகுமார். அதன் பின் என்ன என்ன சம்பவங்கள் சாந்தகுமார் வாழ்க்கையில் நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

பிரித்திவிராஜ் ராமலிங்கம் – நடுத்தர வயது மனிதராக சாந்தகுமார் கதாபாத்திரத்தில் குடிகார மனிதராக நடை, சோகம், உடல் மொழி, பேச்சு என அனைத்திலும் சிறப்பான நடிப்பை தந்து படத்தை நிலைநிறுத்துகிறார். மேலும் அவரின் வாக்கி டாக்கி அட்டூழியங்கள் , வேணியுடனான கைபேசி பேச்சு மற்றும் வேணி – ஆடுகளம் முருகதாஸுடனான காட்சிகளில் அவர் செய்யும் அட்டூழியங்கள் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் அவரது நடிப்பை ரசிக்க வைக்கிறது.

கல்லூரி தோழியாக கிருஷ்ண வேணி கதாபாத்திரத்தில் மைனா நந்தினிக்கு குறைவான திரை இருப்பு என்றாலும் அவரும் அவரது கணவராக நடித்த ஆடுகளம் முருகதாஸ் இருவரும் தோன்றும் காட்சிகள் பார்வையாளர்கள் அனைவரையும் கலகலப்பாக வைத்துள்ளனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரித்தியங்கரா தேவியாக ஜீவா சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் மது தயாளனாக விஜய் முருகன் (கலை இயக்குனர்), மாடர்ன் குடிகார சாமியாக கார்த்திக் நேத்தா, ஆட்டோ டிரைவர் நேருவாக காளி வெங்கட், சுல்தான் பேட்டையாக (பகவதி பெருமாள் (பக்ஸ்)), வெட்டியான் தவவேலுவாக (வேல ராமமூர்த்தி), பஸ் கண்டக்டராக (போஸ் வெங்கட்) உட்பட அனைத்து நடிகர்களும் அவர்களின் தனித்துவமான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

மதன் குணதேவ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு கதையோடு பயணிக்க வைத்து இறுதி காட்சி வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் வைத்துள்ளது.

கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகளுக்கு கோவிந்த் வசந்தா இசை தாலாட்டுகிறது. பின்னணி இசை திரைக்கதையின் ஒரு கதாபாத்திரமாகவே இருந்து ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரை கதையோடு பயணிக்க வைத்து வலுசேர்த்துள்ளது.

13 வயது பள்ளி மாணவனாக இருக்கும் போது சாராயம் குடிக்க ஆரம்பித்து தொடர்ந்து 20 வருடங்களாக முழுநேர குடிகாரனாக மாறி தனது வாழ்க்கையை தொலைத்து, அந்த குடிபழக்கத்தில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆதரவுடன் மீண்டு வந்து இன்று தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த கவிஞராக பிராசித்துக்கொண்டு இருக்கும் கவிஞர் கார்த்திக் நேத்தா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அவர் சொல்ல அதை எழுத்தாளர் பூர்ணா ஜெஸ் மைக்கேல் சினிமாவுக்காக கமர்ஷியலாக எழுதிய திரைக்கதை மற்றும் வசனங்களுக்கு, கார்த்திக் நேத்தா கூடுதல் வசனங்கள் எழுதியுள்ளார். ஒரு முழுநேர குடிகாரன் தன்னால் அதிலிருந்து முழுமையாக வெளியேற முடியும் என்று உறுதியுடன் செயல்பட்டால் நிச்சயம் ஒரு சிறந்த குடும்பத் தலைவனாக வலம் வர முடியும் என்பதற்கு கவிஞர் கார்த்திக் நேத்தா ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.

குடிப்பழக்கத்திற்கு பின்னால் உள்ள சமூக, உளவியல் மற்றும் பொருளாதார வேர்கள் என்ன என்று கேட்கும் ஒரு படமாக, ஒரு சராசரி மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையில் ஏற்படும் போதையின் வலி, அவனைச் சுற்றியுள்ளவர்களின் துயரங்கள் மற்றும் சமூகத்தின் மீதான மொத்த கோபத்தைப் பேசும் தருணங்களுடன், இயக்குனர் என். அரவிந்தன் பார்வையாளர்களின் உணர்வுகளை மிக நுணுக்கமாக சித்தரித்துள்ளார்.

மொத்தத்தில் நியூ மாங்க் பிக்சர்ஸ் சார்பில் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்திருக்கும் குட்டே நகைச்சுவையுடன் நல்ல மெசேஜை வெளிப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு படம்.