‘பெயர் புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்தக்கூடாது’ – ரஜினி சார்பில் வெளியான எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவேன் என அறிவித்து பின்னர் அந்த கருத்தை மாற்றிக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி அதிரடியான கருத்துகளை தெரிவித்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்து உண்டு. அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்ட பொது அறிவிப்பு விவரம் வருமாறு:
சில நிறுவனங்கள் பிரபலமடைய நடிகர் ரஜினியின் பெயர், புகைப்படங்கள், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், “ரஜினிகாந்த் பிரபலமாக இருப்பதால் ரஜினியின் புகைப்படம், குரல் உள்ளிட்ட அனைத்துக்குமான முழு உரிமையும் அவர் வசமே உள்ளது.
எனவே குரல், புகைப்படம் மற்றும் பெயரை முன் அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பரிதி அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அவருக்கான மரியாதை நிகரற்றதாக உள்ளது. ரஜினிகாந்த் செலிபிரிட்டி அந்தஸ்தில் இருக்கிறார். இந்நிலையில் பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்த்தின் குரல், போட்டோ, புகழ் உள்ளிட்டவற்றை அவர் அனுமதியின்றி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இது பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே முன் அனுமதியின்றி வர்த்தக ரீதியாக அதைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக, வரும் நாட்களில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.