Chennai City News

‘லிஃப்ட்’ படத்தின்  ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது

‘லிஃப்ட்’ படத்தின்  ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது

ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லிஃப்ட்’. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார்.  ஜி மதன் படத்தைத் தொகுக்க  சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் ‘லிஃப்ட்’ படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி வினீத் வரபிரசாத் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று இப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி இருக்கிறது. பாடலாசிரியர் ஆர் நிஷாந்த் எழுதியிருக்கும் ‘இன்னா மயிலு..’ எனத்தொடங்கும் பாடலை படத்தின் நாயகனான கவினின் நண்பரும், முன்னணி நட்சத்திர நடிகருமான சிவகார்த்திகேயன் பாடியிருக்கிறார். சிவகார்த்திகேயன் குரலில் வெளியான ‘கனா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களின் பாடல்களைத் தொடர்ந்து ‘லிஃப்ட்’ படத்தின் பாடல்களும் தமிழ் திரை இசை ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பை எளிதில் எட்டிப் பிடிக்கும். குறிப்பாக ஐ டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த பாடலையும், பாடல் வரிகளையும் கேட்டால் அவர்களின் மனதிற்கு நெருக்கமாக அமையும்.

இந்த பாடலை பற்றி தயாரிப்பாளர் ஹேப்ஸி பேசுகையில்,’ இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேலின் துள்ளலான மெட்டுக்கு, நிஷாந்த் எழுதிய இளமை ததும்பும் பாடல் வரிகளை, தன் மாயாஜால குரலால் அற்புதமாக பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் முகவரியாக அமைந்திருக்கும் ‘இன்னா மயிலு..’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாட சம்மதித்ததும், படக்குழுவினருக்கு உற்சாகம் பீறிட்டது. இந்த பாடலுக்கான பதிவின்போது அவர் வருகை தந்து, எங்களுக்குள் இருந்த பதற்றத்தை தணித்து, சூழலை இனிமையானதாக்கி, எளிதாகவும், மிக நேர்த்தியாகவும் அந்தப் பாடலை பாடினார். வசீகரமான அவரின் குரலில் இந்த பாடல் வரிகளை கேட்டபோது ரசிகர்களின் ஆனந்த மனநிலையில் நான் உள்ளிட்ட படக்குழுவினர் இருந்தோம். ‘இன்னா மயிலு..’ என்ற பாடலை பாடிய சிவகார்த்திகேயனுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

Exit mobile version