யாத்திசை படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியா? இயக்குனர் விளக்கம்பதில்!
‘யாத்திசை’ டிரெய்லர் வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் ஏப்ரல் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் ‘யாத்திசை’. வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெய்லர் மூலம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த இப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘யாத்திசை’ தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இசையமைப்பாளர் சக்ரவர்த்தி பேசியதாவது, முதலில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. இது பீரியட் படம் என்பதால் இசையமைப்பது பெரும் சவாலாக இருந்தது.
தயாரிப்பாளர் கே ஜே கணேஷ் பேசியதாவது, எங்கள் குழுவை நம்பி மட்டுமே இந்தப்படத்தை எடுத்துள்ளோம். படத்தின் டிரெயல்ருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள், நன்றி.
இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசியதாவது, “தயாரிப்பாளரிடம் கதை சொன்ன போது உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற்றி சொல் என்றார். இந்தப்படத்தின் உயிர் என்னுடைய டீம் தான். ஒரு ஷெட்யூல் முடித்துக் காட்டச் சொன்னார்கள். அதன் பிறகே இந்தப் படம் உருவாவது உறுதியானது. 1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம், அந்த மொழி வழக்கு; அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது. அக்காலத்திய மொழியில் எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும், இதில் ஒரு கலை இருக்கிறது. சினிமா என்பது கலை. மக்கள் கொண்டாடுவார்கள் என்று தயாரிப்பாளர் தான் உறுதியாக நின்றார். இந்தப் படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியல்ல. ஆனால், யாத்திசை மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இந்திய சினிமாவில் மிகப்பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது” என்றார்.