மாமன்னன் படத்திற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘மாமன்னன்’. கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இதன் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
வரும் 29-ம் தேதி (நாளை) தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில், உதயநிதி கதாநாயகனாக நடிக்க நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018-ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘ஏஞ்சல்’ படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், அந்த படத்தை முடிக்காமல் ‘மாமன்னன்’ படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் எனவும், எனவே ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘மாமன்னன்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார். அதோடு ‘ஏஞ்சல்’ திரைப்படத்தில் நடித்து தருவது குறித்து பின்னர் உத்தரவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.