போலீஸ் பார்வையில் வீரப்பனின் கதை! அதைப் பார்க்கும் போதே கோபமாக வரும் – நக்கீரன் கோபால் ஓப்பன் டாக்!!
‘கூச முனிசாமி வீரப்பன்’ இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும். இந்த தொடரை தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நக்கீரன் கோபாலின் மகள் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் சரத் ஜோதி டைரக்டு செய்துள்ளார். ஜெயசசந்திர ஹாஷ்மி, பிரபாவதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து உருவாக்கி உள்ளனர்.
இந்த தொடரில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து வீரப்பன் பேசிய வீடியோ காட்சியும் உள்ளது.
வீரப்பன் தன் கதையை கூறுவதுபோல் இருப்பது இந்த தொடரின் சிறப்பு அம்சம்.
ஷாம், கௌஷிக் ZEE5 க்கு நன்றி ஏனென்றால் முதலில் நக்கீரன் என்றால் தைரியம் வேண்டும், அப்புறம் வீரப்பன் என்றால் இன்னும் தைரியம் வேண்டும். ஆனால் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள். வீரப்பனின் கதையை எடுப்பதற்காக நிறைய பேர் வந்தார்கள். என் மகள் கேட்பதற்கு முன்பாகவே நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் இதைச் சரியாகச் செய்ய வேண்டுமே என்கிற தயக்கம் இருந்தது. பாலுமகேந்திரா கூட கேட்டார் ஆனால் மறுத்துவிட்டேன். இதற்காக நாங்கள் எங்கள் டீம் இழந்தது அதிகம்.
இது வரை வந்தது அனைத்துமே போலீஸ் பார்வையில் வீரப்பனின் கதை. அதைப் பார்க்கும் போதே கோபமாக வரும். பாதிக்கப்பட்டவன் அவ்வளவு பேர் இருக்கிறார்களே, அதைப்பதிவு செய்ய வேண்டுமே, அவர்களுக்குத் தீர்வு வேண்டுமே என்று தோன்றும். பாதிக்கப்பட்டவர்களுக்காக எவ்வளவோ போராடினோம். இதில் வந்திருப்பது வெறும் .001 பகுதி மட்டுமே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நிவாரணம் இல்லை. அந்த பாதிப்பை வலியை இவர்கள் சரியாகப் பதிவு செய்து விட்டார்கள். என் மகளுடைய டீம் அதைச் செய்துள்ளார்கள் என்பது பெருமையாக இருக்கிறது. இதைத் தைரியமாக செய்த ZEE5 க்கு நன்றி.
திரையில் அந்தக்கதையை உண்மையாகக் கொண்டு வந்துள்ளார்கள். இதற்காக உழைத்த என் டீம் பலர் ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள் நான் 9 மாதம் ஜெயிலுக்குப் போனேன். நக்கீரனின் இந்த உழைப்பைக் காப்பாற்றிக் கொண்டு வந்த இந்த குழுவிற்கும் ZEE5 க்கும் நன்றி.