அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!
A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடி திரில்லராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை A&P குரூப்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு சரவணன்- ஏகே சேகர் ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர்.
ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது . இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நன்றி. நானும் பாடலாசிரியர் கார்த்திக் நேதாவும் ஒரே மேடையில் இருப்பது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கவிஞன். பாடலாசிரியர். பாடலுக்குள் நவீன கவிதைகளை உள்ளே வைப்பதில் சாமர்த்தியசாலி. அவர் எழுதி அண்மையில் ஹிட்டான ‘அஞ்சு வண்ண பூவே..’ பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் மேலும் ஏ ஆர் ரகுமானுக்கு எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்த விழாவின் நாயகன் பரத் வீரராகவனுக்கு வாழ்த்துக்கள். ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசைக்காக ஏ ஆர் ஆர் என்ற பிராண்ட் புகழ்பெற்றது போல்.. எதிர்காலத்தில் பி ஆர் எனும் பிராண்டும் புகழ் பெற வேண்டும். அதற்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் உதய்- நேர்த்தியாக கதை சொல்வதில் கெட்டிக்காரர். இவரும், இசையமைப்பாளரும் எதிரிகளை வலிக்காமல் அடிப்பதில் கெட்டிக்காரர்கள். பாடல் வரிகளை பெறுவதில் சில திருத்தங்களை நாசுக்காக சுட்டிக் காட்டுவார்கள். பரத் நன்றாக வர வேண்டும் என உதய் பாடுபடுகிறார். இவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த அருண் பாண்டியனுக்கு பெரிய மனசு. நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு துணிவு வேண்டும். பேரன்பு இருக்க வேண்டும்.
அவரை சந்தித்தபோது உங்களின் படத்தில் நான் பங்கு பெற வேண்டும் . இது மட்டும் தான் என்னுடைய விருப்பம் என்றேன். ஏனெனில் அவரை நான் அவ்வளவு தூரம் நேசித்திருக்கிறேன். ‘இணைந்த கைகள் ‘ படத்தை இப்போதும் பார்ப்பேன். எப்போதும் பார்ப்பேன்.
‘மூங்கில் கோட்டை’ என்றொரு படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்காக சின்ன வயதில் ஏங்கிருக்கிறேன்.
‘ஊமை விழிகள்’ படத்தை வெளியிடுவதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களை நீங்கள் என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். அதையே நீங்கள் ஒரு கதையாக உருவாக்கலாம். அவ்வளவு அழகும் , திரில்லும் அதில் இருக்கிறது. அதிலும் படம் வெளியான பிறகு சத்யம் தியேட்டரில் கூட்டம் கூடி இருந்ததை நீங்கள் மகிழ்ச்சியுடன் சொன்னபோது உங்களின் சந்தோஷத்தை கண்களால் ரசித்து உணர்ந்தேன்.
இந்தப் படத்தில் கீர்த்தி நடித்திருந்த காட்சிகளை பார்த்து தான் ‘வாழ்க்கை போராட்டமே ‘எனும் பாடலை எழுதினேன். அதில் அவர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இங்குதான் அவர்கள் அப்பா – பொண்ணு என்று இருக்கிறார்கள். இந்த படத்தில் வேறு இரு கதை மாந்தர்களாக இருப்பார்கள். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.
சின்ன படங்கள் வெற்றி பெறும்போது பெரிய படங்களாகிறது. இதற்கு ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களின் வெற்றியே உதாரணம். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.
இவ்விழாவில் இசையமைப்பாளர் பரத் வீரராகவன் பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். எனக்கு இசையை கற்பித்த குருமார்களுக்கு வணக்கம்.
இயக்குநருடன் முதன்முதலாக அருண்பாண்டியன் சாரை சந்தித்தோம். அவர் முதலில் எதையும் பேசவில்லை. இந்தப் படத்திற்கான இசையமைப்புக்கு உரிய பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன். அவர் அதனை கேட்டுவிட்டு, இதற்குள் செய்து விடுவாயா? என கேட்டார். நான் ஆமாம் என்று பதிலளித்தேன். ஆனால் உண்மையில் நான் சொன்ன பட்ஜெட்டை விட மும்மடங்கு அதிகமானது. ஆனால் அதனை செய்து கொடுத்தார். இந்த மனசு யாருக்கு வரும்? . இவர் கொடுத்த ஆதரவினால் தான் என்னால் பல இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற முடிந்தது. இங்கு மேடையில் இருக்கும் பாடலாசிரியர்கள் மோகன் ராஜன் மற்றும் கார்த்திக் நேதா ஆகியோர் ஐநூறு பாடலுக்கு மேல் எழுதிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் உதய் .கே நண்பர் மட்டுமல்ல மிகுந்த திறமைசாலி. இந்த படத்தின் பின்னணி இசைக்காக காட்சிகளை பார்த்த போது.. அதில் இந்திராவாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பிரமாதம். அருண் பாண்டியனை இந்த படத்தில் பார்ப்பது போல் வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டீர்கள். நன்றாக ஸ்மார்ட்டாக ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து நடனமாடி இருக்கிறார்.
நாங்கள் பொறுப்பை உணர்ந்து கடினமாக உழைத்து படைப்பை உருவாக்கி இருக்கிறோம். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. அனைத்தும் நன்றாக இருக்கிறது. பாடல்களையும், படத்தையும் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து விட்டு ஆதரவு தாருங்கள்” என்றார்.நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில், ” இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஏன் யாரையும் அழைக்கவில்லை என்றால் .. அவர்கள் இங்கு வருகை தந்து படத்தைப் பற்றி மிகையாக பேசி விடுவார்களோ ..! என்பதற்காக தான் யாரையும் அழைக்கவில்லை.
நாங்கள் எங்களுக்கு பிடித்தது போன்ற ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற வகையில் தரமுள்ள படத்தை தயாரித்திருக்கிறோம். நீங்கள் கொடுக்கும் காசு வீணாகாது. ஏனெனில் திரைக்கதை அவ்வளவு வலிமையுடன் இருக்கிறது. இதனால் தான் சிறப்பு விருந்தினர்கள் என யாரும் இல்லாமல் என் நண்பர்களான கருணா மூர்த்தி மற்றும் பி ஆர் ஓ டைமண்ட் பாபு ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் மூன்று சிறப்பம்சங்கள் இருக்கிறது. எல்லாரும் புது தொழில்நுட்ப கலைஞர்கள். கீர்த்தி சொன்ன பிறகு இந்த குழுவினருடன் கதையைக் கேட்டேன். கதையும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் இந்த கதையில் சிறிதளவு இணைந்து பணியாற்ற வேண்டியது இருக்கும். உங்களுக்கு சம்மதமா? எனக் கேட்டேன். அவர்களும் சரியென சம்மதித்தார்கள்.
அதன் பிறகு இயக்குநர் என்னிடம் இந்த படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருக்கிறோம் என்றார். அவர்களுக்கு ஏதேனும் அனுபவம் இருக்கிறதா ?அவர்களின் திறமை என்ன? எனக் கேட்டபோது, அவர்கள் வெளியில் தான் நிற்கிறார்கள். உள்ளே வர சொன்னால் அவர்கள் தங்களின் திறமையை காண்பிப்பார்கள் என்றார் அந்த தருணத்தில் இசையமைப்பாளர் -ஒளிப்பதிவாளர் – படத்தொகுப்பாளர் -என அனைவரும் வந்திருந்தனர். அவர்களின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தருணத்தில் தான் நம்முடைய அனுபவத்தை இவர்களுக்கு வழங்கலாம் என தீர்மானித்தேன்.
முதல் கட்ட படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்ற போது அவர்களின் ஒருங்கிணைப்பு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஊமை விழிகள் படத்தில் பணியாற்றும்போது இருந்த ஆர்வம் இவர்களிடத்தில் தென்பட்டது. இதனால்தான் என்னுடைய குடும்பத்தார்களை விட இரண்டு வருடங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இந்தப் படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ” என்றார்.