கட்சி அலுவலகத்தில் மீளாத் துயில் கொண்ட கேப்டன்.. முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் சென்னையில் காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பிற்பகல் விஜயகாந்த் உடல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கோயம்பேட்டுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இறுதி ஊர்வலம் மாலை 6 மணி மணியளவில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தை அடைந்தது. மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட பேழை, கீழே இறக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் சந்தன பெட்டியில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு, அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் இறுதிச்சடங்குகளை செய்தனர். தேவாரம், திருவாசகம், பாடப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. விஜயகாந்திற்கு அவரது மகன்கள் கண்ணிர்மல்க தந்தைக்கு இறுதிச்சடங்குகளை செய்தனர்.
நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், முக்கிய தலைவர்கள் உட்பட 200 பேருக்கு மட்டுமே நேரில் காண அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வெளியில் திரண்டிருந்தவர்கள் இறுதிச் சடங்கை காண எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்களின் அளவு கடந்த அன்பை சுமந்து கொண்டு பூமியில் விதைக்கப்பட்டுள்ளார் விஜயகாந்த்.