‘கண்ணப்பா’ படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது – நடிகை மதுபாலா மகிழ்ச்சி!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார்.
வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடும் நிகழ்வு இன்று (மே 30) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், விஷ்ணு மஞ்சு, மதுபாலா, இயக்குநர் முகேஷ் குமார் சிங், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
நடிகை மதுபாலா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், நிறைய விசயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்து, எதுவும் சொல்ல முடியாமல் போகும். அப்படி ஒரு நிலையில் தான் நான் இருக்கிறேன். இந்த படம் பண்ணுவதற்கு என்னை சிவன் தான் தேர்வு செய்தார், என்று விஷ்ணு சார் நேர்காணலில் சொன்னார். அதுபோல தான் நானும். சிறு வயதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். யார் படத்தில் நடிக்க வேண்டும், அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல், எதுவுமே தெரியாம நடிக்க வந்தவள் நான். நடிகையாக எப்படி அறிமுகமாக வேண்டும் என்றால், பெரிய பெரிய இயக்குநர்கள் பெயரை சொல்வார்கள், ஆனால் நான் அப்படி எல்லாம் சொல்லாமல், எதாவது ஒரு படம், இயக்குநர் யாராக இருந்தாலும் பரவாயில்லை என் முகம் திரையில் வர வேண்டும், என்ற எண்ணத்தில் மட்டுமே நடிக்க வந்தேன். அது ஏ கிரேட் படமா, பி கிரேட் படமா, நல்ல படமா, கெட்ட படமா என்று எதையும் கேட்காமல் நடிக்க வந்தவள் தான் நான். அதுபோல தான் இந்த படத்தின் வாய்ப்பும் அமைந்தது. இந்த படத்திற்காக எனக்கு கால் வந்தபோது உடனே எஸ் சொல்லிவிட்டேன். என்ன கதாபாத்திரம், என்ன கதை என்று எதையும் கேட்கவில்லை, உடனே சம்மதம் தெரிவித்து விட்டேன், இன்று படத்தை பார்க்கும் போது, இரண்டாவது முறை எதையும் கேட்காமல் ஓகே சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. இதுவரை நான் நடித்த படங்களில் யாருடன் நடிக்கிறேன், என்ற எந்த விவரமும் தெரியாமல் நடித்து வந்திருக்கிறேன். அதே போல் தான் இந்த படத்திலும் நடித்தேன். இதில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும் போது மிகவும் சந்தோஷப்பட்டேன். இந்த படத்தில் நடிக்க வந்த போது, மோகன் பாபு சார் 90-களில் நான் இரண்டு வாய்ப்பளித்தேன், என்னுடன் சேர்ந்து ஏன் நடிக்கவில்லை, என்று கேட்டார். இப்போது அவர் படத்திலும் நடித்துவிட்டேன், அதனால் அவர் ஏன் நடிக்கவில்லை என்று கேட்க முடியாது. அதேபோல் 35 வருடங்களுக்குப் பிறகு மோகன்லாலுடன் சேர்ந்து நடித்து விட்டேன். அக்ஷய் குமார் படங்களிலும் நிறைய நடித்திருக்கிறேன், அவருடனும் இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி.
இந்த படத்தின் மூலம் சிறந்த நட்பு எனக்கு கிடைத்திருக்கிறது. விஷ்ணு உடன் இணைந்து பயணித்தது மகிழ்ச்சி. கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சு சிறப்பாக பங்களித்திருக்கிறார். இயக்குநர் முகேஷ் குமார் சிங் மிக அமைதியானவர், அவரது பணி மிக சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. நடிகர் சம்பத் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இந்த சிறப்பான ஒரு படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக பணியாற்றியேன். இந்த படத்தின் காட்சியை பார்த்த நீங்கள் வியந்திருப்பீர்கள், என்று நினைக்கிறேன். படமும் மக்களை வியக்க வைக்கும், என்று நம்புகிறேன்.
இளம் அம்மா என்ற இமேஜ் எனக்கு இருக்கிறது, தற்போது அந்த இமேஜை கண்ணப்பா படம் உடைத்து, போர் வீராங்கனை என்ற புதிய பிம்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. நான் அந்த கதாபாத்திரத்தில் மிக மகிழ்ச்சியாக நடித்தேன். நமக்கு பலர் மீது பல கோபங்கள் இருக்கும், ஆனால் அந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாது. இந்த படத்தில் சண்டைக்காட்சியில் எனக்கான கோபத்தை வெளிக்காட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த கத்தியை என்னிடம் கொடுத்து அடிக்க சொல்லியதும், எதிரே வந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்து விட்டேன். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இருந்த ஒரே கஷ்ட்டம், அந்த வெயிட்டான கத்தியை தூக்குவது தான். போர் வீராங்கனையாக உடை அணிந்து கம்பீரமாக நிட்பேன், கையில் கத்தியை கொடுத்ததும், அதன் வெயிட் தாங்க முடியாது. கை எல்லாம் வலி எடுக்கும், அது ஒன்று தான் கஷ்ட்டமாக இருந்தது, மற்றபடி என் கதாபாத்திரத்தில் மகிழ்ச்சியாக நடித்தேன், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. திரையில் பார்க்கும் போது ரசிகர்களும் அதை உணர்வார்கள், நன்றி.” என்றார்.
ஷெல்டன் சாவு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்டீபன் தேவஸி இசையமைத்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். 24 பிரேம்ஸ் ஃபேக்டரி, ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் மோகன் பாபு பிரமாண்டமாக தயாரித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.