Chennai City News

இயல், இசை, நாடக மன்ற புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இயல், இசை, நாடக மன்ற புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தொன்மை வாய்ந்த தமிழக கலைகளை பாதுகாத்து வளர்ப்பது மற்றும், பல்வேறு கலைப் பணி திட்டங்களை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, அதன் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதோடு, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் வகிப்பார் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: “வாகை சந்திரசேகர், தமிழ்த் திரைப்படத் துறையில் தனது குணச்சித்திர நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்த காரணத்தால், இவரது நடிப்பாற்றலைப் பாராட்டி, 1991 -ம் ஆண்டு, கலைஞர் இவருக்கு “கலைமாமணி விருது’’ வழங்கிச் சிறப்பித்தார்.
அதோடு மட்டுமல்லாமல், 2003-ம் ஆண்டு ஒன்றிய அரசால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான “தேசிய விருது’’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் வாகை சந்திரசேகர். 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலராகப் பதவி வகித்து, சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்.
அதோடு, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2016 முதல் 2021 வரை அந்தத் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது”.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Exit mobile version