இதுவரை நான் செய்யாத விசயத்தை ‘கண்ணப்பா’ படத்தில் செய்திருக்கிறேன் – பிரபுதேவா
CCN Admin
‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர் கதை எழுத, விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். ஸ்டீபன் தேவசி இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். பிரபு தேவா மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.
வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜனவரி 18 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழு கலந்துக்கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் இயக்குநர் முகேஷ் குமார் சிங் பேசுகையில், “எங்கள் கண்ணப்பா படத்தின் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. மேடையில் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என ‘கண்ணப்பா’ படக்குழுவினர் அனைவரும் கடவுள் சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக நான் கடவுள் சிவனால் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். அதனால், தான் என் முதல் படத்திலேயே இந்திய திரையுலகின் முன்னணி கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கண்ணப்பா பிரமாண்டமான திரை காவியம் மட்டும் அல்ல தற்போதைய தலைமுறையினர் அறிந்துக் கொள்ள வேண்டிய வரலாறு. நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும். நன்றி.” என்றார்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில், “மோகன் பாபு சார், விஷ்ணு சார் அனைவருக்கும் நன்றி. ‘கண்ணப்பா’ படத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. 100 பேருக்கும் மேற்பட்ட ஒரு பெரும் குழுவை நியூசிலாந்து நாட்டுக்கு அழைத்துச் சென்று இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். நான் ஒரு முறை அங்கு சென்றிருந்த போது, மூன்று கேமராக்கள் வைத்துக்கொண்டு விஷ்ணு சார் சில காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார். மற்றொரு பக்கம் அதேபோல் மூன்று கேமராக்கள் வைத்துக் கொண்டு ஒரு குழு இருந்தது, அது யார்? என்று கேட்டேன், அதுவும் நம்ம படம் தான், மதுபாலா மேடம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது, என்று விஷ்ணு சொன்னார். மற்றொரு பக்கம் மூன்று கேமராக்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள், அங்கு என்ன நடக்கிறது? என்றால், சரத்குமார் சாரின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது, என்றார். இப்படி மிகப்பெரிய குழுவுடன் ஏகப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது, எடிட் செய்வதற்கும் சவாலாக இருக்கிறது. படம் சூப்பராக வந்திருக்கிறது. படத்தொகுப்பு செய்ய உதவிய இணை இயக்குநருக்கு நன்றி. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேசுகையில், “பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இந்த படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த விஷ்ணு சாருக்கு நன்றி. இந்த படத்தின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ஷெல்டன். அமெரிக்க ஒளிப்பதிவாளர் அவர். நான் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக தான் பணியாற்றியிருக்கிறேன். விஷ்ணு சார் என் குடும்ப நபர் போன்றவர், அவர் தான் என்னை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்தினார். விஷுவலாக படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளும் மிக சிறப்பாக வந்திருக்கிறது. கண்ணப்பாவின் முக்கியமான கதை, அவர் யார்?, அவர் எப்படிப்பட்ட சிவ பக்தர் போன்றவற்றை தாண்டி, படத்தின் மற்ற அம்சங்கள் அனைத்தும் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் வந்திருக்கிறது. விஷ்ணு சாருக்கு என் வாழ்த்துகள். பிரபு மாஸ்டர், சரத்குமார் சார் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி, நன்றி.” என்றார்.
நாயகி ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், புது வருடத்தில் உங்களை தான் முதல் முறையாக சந்திக்கிறேன், அதுவும் ‘கண்ணப்பா’ போன்ற பிரமாண்டமான படத்திற்காக சந்திப்பது மகிழ்ச்சி. இவ்வளவு பெரிய படத்தில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்காக நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கிறேன். விஷ்ணு சார், மோகன் பாபு சார், இயக்குநருக்கு நன்றி. இந்த குழு ஒரு குடும்பம் போல் இருந்தது, என்னை ரொம்ப நன்றாக பார்த்துக் கொண்டார்கள். இந்த படம் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் நடிப்பதற்காக தான் திரையுலகிற்கு வந்தேன், ஆனால் இந்த படத்தில் பணியாற்றும் போது, ஒரு காட்சிக்காக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள், ஒரு காட்சியை கூட்டு முயற்சியின் மூலம் எப்படி அழகாக கொண்டு வருகிறார்கள், என்பதை பார்த்து எனக்கு பிலிம் மேக்கிங் மீது ஃபேஷன் வந்துவிட்டது. இந்த படத்தில் கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. உண்மையாகவே படக்குழுவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களது பெரும் முயற்சியினால் படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும். நன்றி.” என்றார்.
பிரபு தேவா பேசுகையில், “இந்த படத்திற்காக மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறேன். மோகன் பாபு சார் எனக்கு போன் பண்ணி என்னை வர வேண்டும் என்று சொன்னார். நான் வரணுமா சார், என்றேன், ”நீ வரலனா நான் உன் வீட்டுக்கு வந்துடுவேன்” என்றார். நானே வந்துட்றேன் சார், என்றேன். மூன்று பாடல்களிலும் நடனம் பெரிதாக இருக்காது, ஆனால் எமோஷனல் இருக்கும். அதேபோல் கிளைமாக்ஸ் பாடல் மிகவும் முக்கியமானது, அதில் நீ முக்கியமாக இருக்க வேண்டும், என்று சொன்னார். எனக்கும், கிளைமாக்ஸில் பாடல் என்பது இது தான் முதல் முறை. அதேபோல் அதில் நடனத்தை விட எமோஷனலை கொண்டு வர வேண்டும் என்பது சவலாக இருந்தது, அதனால் பணியாற்றவும் ஆர்வமாகவும் இருந்தது. இயக்குநர் முகேஷ் குமார் சிங் என்றதும், அவர் இந்தி அவருக்கு எப்படி நமது கலாச்சாரம் தெரியும், என்று நான் யோசித்தேன். ஆனால், அவருக்கு சிவனைப் பற்றி நிறைய தெரிந்திருக்கிறது. எங்க அனைவரையும் விட அவருக்கு தான் அதிகம் தெரிந்திருக்கிறது. இந்த படத்தை இயக்குவதற்கு அவர் தான் சரியான நபர், சிறந்த இயக்குநர். அமெரிக்கன் ஒளிப்பதிவாளர் பணியாற்றியிருக்கிறார். அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். விஷ்ணு எனக்கு தம்பி போல, மோகன் பாபு சார் எனக்கு பெரிய அண்ணன். அவருக்கு என் வாழ்த்துகள். படப்பிடிப்பு தளத்தில் விஷ்ணு ஒரு தயாரிப்பாளர் போல் இருக்க மாட்டார், ஒரு உதவி இயக்குநர் போல், புரொடக்ஷன் உதவியாளர் போல தான் இருப்பார். தயாரிப்பாளர் பக்கம் நிற்காமல், தொழில்நுட்ப கலைஞர்கள் பக்கம் இருப்பார், அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தன் நன்றாக நடித்திருக்கிறார், அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சித்தார்த் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். அனைவருக்கும் நன்றி.” என்றார்.