இன்றளவிலும் 9 நாடுகளில் டாப் டென்னில் டிரெண்டிங்காகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம்!
அமேசான் ப்ரைம் தளத்தில், பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9க்குமேற்ப்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.
வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
“கேப்டன் மில்லர்” படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.
பெரும் நட்சத்திரக் கூட்டணியில், உயர்தர தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், வரலாற்றுப் பின்னணியில் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளிவந்த இப்படம், திரை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி 40 நாட்களை கடந்த நிலையில், இன்றளவிலும் இந்தியா மட்டுமல்லாது, தான்சேனியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளிலும், பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், போன்ற நாடுகளிலும் தொடர்ந்து முதல் 5 இடங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி வெளியான இப்படத்தின் இந்தி பதிப்பு, பல்வேறு புலம்பெயர் நாடுகளில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்த நிலையில், இந்தியாவில் முதல் 10 இடங்களுக்குள் #1 படமாக இடம் பிடித்துள்ளது. மேலும் தொடர்ந்து 2 வாரமாக, இப்படம் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை எந்தவொரு இந்தியத் திரைப்படமும் செய்யாத புதிய சாதனை இதுவென்பது குறிப்பிடதக்கது.