டிஎன்ஏ (DNA) சினிமா விமர்சனம் : டிஎன்ஏ குடும்பங்களுக்கு நெருக்கமான ஒரு துடிப்பான க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :- ஆனந்;தாக அதர்வா, திவ்யாவாக நிமிஷா சஜயன், சின்னசாமியாக பாலாஜி சக்திவேல், வெங்கட்டாக ரமேஷ் திலக், சிவசுப்பிரமணியமாக சேதன், புனிதவதியாக ரித்விகா, விஜி சந்திரசேகர், பாட்டியாக சாத்தூர் விஜயலட்சுமி, சுப்பிரமணி சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இயக்கம் – நெல்சன் வெங்கடேசன், பேனர் – ஒலிம்பியா மூவீஸ், தயாரிப்பு – ஜெயந்தி அம்பேத்குமார், இணை எழுத்தாளர் – அதிஷா, ஒளிப்பதிவாளர் – பார்த்திபன், பின்னணி இசை – ஜிப்ரான், இசை – சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சாஹி சிவா, பிரவின் சைவி, அனல் ஆகாஷ், படத்தொகுப்பாளர் – சாபு ஜோசப் வி.ஜே, வெளியீடு – ரெட் ஜெயண்ட் மூவீஸ், பிஆர்ஒ – சுரேஷ் சந்திரா, யுவராஜ்.
காதல் தோல்வியால் மனம் உடைந்து, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்து மது போதைக்கு அடிமையாகி இருக்கிறார் ஆனந்த் (அதர்வா). திவ்யா (நிமிஷா சஜயன்) எல்லைக்கோட்டு ஆளுமை கோளாறு (Borderline Personality Disorder ) பாதிக்கப்பட்டு திருமணமாகாமல் இருக்கும் ஒரு அப்பாவிப் பெண். அவர்களின் சொந்த குடும்பத்தினர் கூட ஒரு சுமையாக கருதுகிறார்கள். இந்த இரு வீட்டாரின் குடும்பங்களும் அவர்களைப் புறக்கணிக்கும் சூழலில், வாழ்க்கையின் காற்றில் தொலைந்து போன ஆனந்த் மற்றும் எல்லைக்கோட்டு ஆளுமை கோளாறால் பாதிக்கப்பட்ட திவ்யா இருவருக்கும் இருவீட்டார் ஒப்புதலுடன் திருமண பந்தத்தில் இணைகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு ஆனந்தும் திவ்யாவும் ஒருவருக்கொருவர் அன்பை காண்கிறார்கள். திவ்யா கர்ப்பமாகி இருவரும் புதிய பெற்றோராக தங்கள் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கத் தயாராக இருக்கும் போது, அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை அவளுடைய குழந்தை இல்லை, குழந்தையை மாற்றி விட்டதாக கூறி திவ்யா தனிமையில் போராடுகிறாள். குடும்பத்தினரும், மருத்துவ மனை நிர்வாகமும் அதை ஏற்க மறுக்கிறார்கள். எல்லா ஆதாரங்களும் அவள் சொல்வதற்கு எதிராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், திவ்யாவின் கூற்று மிகவும் நம்பத்தகாத தாக தெரிகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தனித்துவமான முக அம்சங்கள் உருவாக ஒரு மாதம் ஆகும், எனவே தனது குழந்தையை அடையாளம் காண போராடுகிறார் ஆனந்த். ஆரம்பத்தில் திவ்யாவின் சொல்லை நம்ப முடியாமல் தவிக்கும் ஆனந்த், இறுதியில் அவளை நம்பி, காணாமல் போன தன் குழந்தையை பற்றி விசாரிக்க முடிவு செய்கிறார். காணாமல் போன தங்கள் குழந்தையை கண்டுபிடிக்க காவல்துறையின் உதவியை நாடுகிறான். ஆனந்த குழந்தையின் ரத்த மாதிரியை எடுத்து டிஎன்ஏ டெஸ்ட் க்கு அனுப்புகிறார். சில நாட்களில் இது இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை இல்லை என்ற அதிர்ச்சி டிஎன்ஏ ரிசல்ட் மூலம் தெரிய வருகிறது. அதன் பிறகு, ஆனந்த ஒரு போலீஸ் ஏட்டு சின்னசாமி (பாலாஜி சக்திவேல்) உதவியுடன் தேடுதல் வேட்டை தொடங்குகிறார். அப்போது நரபலி, குழந்தை கடத்தல், குழந்தை விற்பனை போன்ற பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்; நடக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர்களது குழந்தைக்கு என்ன ஆனது? பிறந்த உடனே கடத்தப்படும் குழந்தை பின்னிருக்கும் உண்மை என்ன? உண்மையில் ஆனந்த-திவ்யா தம்பதியின் குழந்தை மாற்றப்பட்டத? போன்ற கேள்விகளுக்கு படத்தின் மீதிக்கதை விடை சொல்லும்.இதுவரை இப்படி ஒரு அதர்வாவை அவருடைய படத்தில் யாரும் பார்த்திருக்க மாட்டோம். உண்மையில் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். விரக்தி, சோகம், சந்தோஷம், அழுகை, அதிரடி என அனைத்தையும் உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தி உள்ளார்.
எல்லைக்கோட்டு ஆளுமை கோளாறு (BPD) பாதிக்கப்பட்ட ரொம்ப சவாலான திவ்யா கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் நடிப்பின் அரக்கியாக அசத்தியிருக்கிறார். பிறந்த குழந்தையை முதன் முதலில் கையில் வாங்கி நெஞ்சோடு அணைக்கும் போது வெளிப்படும் ஒரு தாயின் உணர்ச்சி வெள்ளம், முதல் ஸ்பரிசத்தை வைத்து இரண்டாவது முறையாக கொடுக்கப்படும் குழந்தை தன்னுடையது இல்லை என்பதை உணரும் போது, தான் பெற்ற குழந்தையைக் காணாமல் போகும் போது ஏற்பட்ட ஏக்கமும், வேறொருவரின் குழந்தையை அணைக்கும் இடத்திலும் அற்புதமான நடிப்பு தந்து தாய்மையின் பெருமை நிலைநாட்டியுள்ளார் நிமிஷா சஜயன்.
அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் இருவரும் தான், டிஎன்ஏ.,வின் ஒட்டு மொத்த உயிர் நாடி.ஓய்வு பெறப்போகும் மனிதநேயம் கொண்ட ஒரு போலீஸ்காரர் சின்னசாமியாக பாலாஜி சக்திவேல் கதைக்கு கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பு தந்து அனைவரது பாராட்டுகளை பெறுகிறார்.
வெங்கட்டாக ரமேஷ் திலக், சிவசுப்பிரமணியமாக சேதன், புனிதவதியாக ரித்விகா, விஜி சந்திரசேகர், சுப்பிரமணிசிவா, பாட்டியாக சாத்தூர் விஜயலட்சுமி, ஆகியோர் சரியான மீட்டரில் நடிப்பை வழங்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் பார்த்திபன், ஜிப்ரான் பின்னணி இசை, சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சாஹி சிவா, பிரவின் சைவி, அனல் ஆகாஷ், ஆகிய ஐந்து இசையமைப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் வி.ஜே, ஆகியோரின் பங்களிப்பு பரபரப்பான புலனாய்வு த்ரில்லர் மற்றும் உணர்ச்சிபூர்வமான நாடகத்தின் தன்மை இறுதிவரை கவர்ந்திழுக்க உதவியுள்ளது.
வழக்கமான மனிதர்களின் வாழ்வியலாக அவர்களின் வாழ்வியல் இருக்காது. அவர்கள் தனித்துவமான வாழ்க்கையை வாழ்வார்கள். இரண்டு உன்னதமானவர்களுக்கு இடையே இருக்கும் அன்பு தான் படத்தின் மையக் கரு. கதை ஆனந்த் மற்றும் திவ்யா என்ற இரண்டு கதாபாத்திரங்களை சுற்றி வருகிறது. அவர்களுக்கு இடையேயான காதல், அவர்களின் திருமணம், அவர்களின் பிந்தைய வாழ்க்கை, அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அது அவர்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் வலியை ஏற்படுத்துகிறது என்பது அவர்களைச் சுற்றியுள்ள குடும்ப சூழலின் கதை. டிஎன்ஏ கதையில் குற்றத்தின் பின்னணியை விவரிக்கும் சிசிடிவி காட்சிகள், நரபலிக்கான தேடல், ஒரு குழந்தையை கடத்த பையுடன் சுற்றித் திரியும் ஒரு வயதான மூதாட்டி போன்ற காட்சிகளுடன் திரைக்கதை அமைத்து படம் பார்க்கும் பார்வையாளர்களை பதற்றத்தோடு சீட்டின் நுனியில் அமர வைக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான படைப்பை உருவாக்கியுள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் மெட்ராஸ் மேட்டினி அனைத்தும் மக்களை மகிழ்வித்த குடும்ப படங்கள். டிஎன்ஏ நிச்சயமாக அந்த வரிசையில் இடம்பெறும்.
மொத்தத்தில் ஒலிம்பியா மூவீஸ் சார்பாக ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்த டிஎன்ஏ குடும்பங்களுக்கு நெருக்கமான ஒரு துடிப்பான க்ரைம் த்ரில்லர்.