டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

0
87

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.6.2025) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக நீரினை திறந்து வைத்தார்.

இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 114.910 அடியாகவும் நீர் இருப்பு 85.583 டி.எம்.சி. ஆக உள்ளது. குறுவை பாசனம் காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை 5,22,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 138.52 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது.

இதற்கு மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா அணைகளிலிருந்து மாதந்தோரும் விடுவிக்கப்படும் நீரினை கருத்தில் கொண்டும் மேட்டூர் அணையில் இருந்து 125.68 டி.எம்.சி தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள 12.84 டி.எம்.சி தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்.

குறுவை பாசனம் :

நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 118.17 டி.எம்.சி தண்ணீரும், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30,800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 7.51 டி.எம்.சி தண்ணீரும் மேட்டூர் அணையிலிருந்து தேவைப்படுகிறது.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று காலை வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக வினாடிக்கு 10,000 கனஅடியாக உயர்த்தப்படும். மேலும், குறுவை சாகுபடி தேவைக்கேற்ப இந்த அளவு உயர்த்தி வழங்கப்படும்.

சம்பா மற்றும் தாளடி பாசனம் :

மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12,10,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 268.47 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீர் வடகிழக்கு பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.

மேட்டூர் அணையின் கீழ் பகுதியில் ஆற்றில் இருந்து சுமார் 155 குடிநீர் திட்டங்களின் மூலம் தினசரி 1707.63 மில்லியன் லிட்டர் தண்ணீர் 18 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆண்டு முழுவதும் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 40-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கும் தண்ணீர் திறந்துவிடப்படும் பொழுது அணை மின்நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும் மற்றும் சுரங்க மின்நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், என மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அணையின் கீழ்பகுதியில் 30 மெகாவாட் வீதம் 7 கதவணை நீர்மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் அணை கட்டப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு 20-வது முறையாக பாசன விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட ஜீன்-12 அன்று காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசன தேவையை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் அளவினை உயர்த்தியும் குறைத்தும் வழங்கப்படும்.

நடப்பாண்டில் காவிரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர்பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறைவைத்துப் பயன்படுத்த நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறும், மிக அதிக அளவு மகசூல் பெற்று பயனடையுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாய பெருமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.