‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா!

0
264

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா!

பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.

திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….

குழந்தை நட்சத்திரம் கமலேஷ் பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். எப்படி சொல்றதுன்னு தெரியவில்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துக்கு வாய்ப்பு கொடுத்த அபி அண்ணாக்கு ரொம்ப நன்றி. அதுக்கப்புறம் ப்ரொடியூசர்ஸ் யுவராஜ் அண்ணாவிற்கு நன்றி. சசிகுமார் அங்கிள், என்னிடம் ரொம்ப பாசமா இருந்தார், ரொம்ப சந்தோஷம். நன்றி அங்கிள். அப்பறம் சிம்ரன் மேம், உங்க கூட நடித்தது ரொம்ப சந்தோஷம் மேம், அதுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி

நடிகர் பகவதி பெருமாள் பேசியதாவது…
இந்த மாதிரி ஒரு சக்சஸ் மீட் நீங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள், நானும் அவ்வபோது பார்த்திருக்கேன். ஆனால் இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இயற்கைக்கு நன்றி. இந்தப் படம் பண்ணும் பொழுதே அந்த பிளஸ்சிங் இருந்துட்டே இருந்தது. இந்தப்படத்தை அவ்வளவு அழகா ஆடியன்ஸ் கிட்ட கொண்டு போன பத்திரிக்கையாளர்களுக்கு ரொம்ப நன்றி. எல்லோருக்கும் நன்றி.

நடிகை சௌந்தர்யா பேசியதாவது…
என் சந்தோசத்தை சொல்ல அளவே கிடையாது. எனது 8 வருட திரைப்பயணத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இப்படிப்பட்ட வெற்றி மேடையில் முதல் முறையாக பேசுகிறேன். முதல் நன்றி அபிக்கு. வேறு யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அவர் தான் நான் வேண்டும் என, என்னை காஸ்ட் செய்தார். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சசிகுமார் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. சிம்ரன் மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை. அவர் அவ்வளவு ஃபிரண்ட்லி. அவருடன் மீண்டும் நடிக்க ஆசை. என் கேரக்டரை தனியாக குறிப்பிட்டு பாராட்டிய, அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இனிமேல் வரும் காலத்தில் உங்களை மகிழ்விக்கும் பாத்திரங்களை ஏற்று நடிப்பேன் நன்றி.

பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது…
இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் தந்த பாராட்டுக்களுக்கு நன்றி. சசிக்குமார் சார் இது உங்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸ். அயோத்தி படத்திலிருந்து உங்கள் வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய பிரம்மாண்ட வெற்றிப்படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. என் ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் தந்த, ஜில்லா விட்டு ஜில்லா பாடல் தான் என் திரை வாழ்க்கையை நிலை நிறுத்தியது. அதற்காக நன்றி. குட் நைட் படத்திற்கு பிறகு தான், என் வெற்றிப்பயணம் துவங்கியது. கடந்த வருடம் லப்பர் பந்து எனக்கும் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இப்படி ஒரு படம் மில்லியன் டாலர் நிறுவனத்திற்கு அமைய வேண்டும் என ஆசைப்பட்டோம் அது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடந்துள்ளது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

திங் மியூசிக் சார்பில் சந்தோஷ் பேசியதாவது..,
பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான். மில்லியன் டாலர் யுவாராஜுக்கு வாழ்த்துக்கள். யுவராஜ் ஒரு திரைக்கதையை தேர்ந்தெடுக்கிறார் என்றால் அது கச்சிதமாக இருக்கும். ஒவ்வொரு படைப்பிலும் அவர் அவ்வளவு உழைக்கிறார். அவருடன் அனைத்து படத்திலும் திங் மியூசிக் இணைந்திருப்பது மகிழ்ச்சி. யுவராஜுடன் இணைந்து இருக்கும் மகேஷுக்கும் நன்றி. ஷான் ரோல்டன் முதல் படமாக எந்தப்படம் செய்கிறார் எனத் தெரியாமலே அவரது மூன்று படத்தை ஒப்பந்தம் செய்தோம், அப்போது இருந்து அவருடன் பணிபுரிகிறோம். அவருக்கு வாழ்த்துக்கள். பாடலாசிரியர் மோகன்ராஜுக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் அபி கதை சொன்னவுடனே இது வெற்றி பெறும் என தெரியும். இப்போது எல்லோரும் கொண்டாடுகிறார்கள் வாழ்த்துக்கள். சசிகுமார் சாரை, இப்படத்திற்காக அபி சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது சுப்பிரமணியபுரம் படத்திலிருந்து அவரைத் தெரியும். இந்தப்படத்திற்கு சசி சார் பெருமை சேர்த்துள்ளார். மொத்தப்படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள் நன்றி.

எடிட்டர் பரத் விக்ரமன் பேசியதாவது..,
இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. நான் மிக சந்தோசமாக இருக்கிறேன். படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் என் அம்மா என்னிடம் ஈவ்னிங் ஷோ டிக்கெட் கேட்டார்கள் ஆனால் மறுநாள் வரை ஷோ ஃபுல்லாக இருந்தது. என் சந்தோசத்துக்கு அளவே இல்லை. அபி இன்னும் பல உயரம் செல்வாய். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது…,
ஒரு நல்ல படத்தை ரசிக்கிற வகையில் செய்துவிட்டால், மீடியா எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்த்து விடுவார்கள். அதை செய்து காட்டிய பத்திரிக்கைக்கு நன்றி. என் அஸிஸ்டெண்ட் சபரி, அஸ்வின் மற்றும் என் டீம் அனைவருக்கும் நன்றி. எல்லாப்படங்களுக்கும் ஒரே மாதிரி தான் உழைப்போம் ஆனால் சில படம் நமக்கு ரொம்ப பிடித்து விடும். யுவராஜ் பிரதர் நீங்கள் ஜெயிக்க வேண்டும், நீங்கள் நினைத்ததை விட அதிகம் நான் ஆசைப்பட்டேன், தமிழ் சினிமா மரத்தில் ஒரு புது கிளை ஆலமரமாக முளைத்து கொண்டிருக்கிறது. பரத் மிக முக்கியமான ஆளாக வளர்ந்து வருகிறார். வாழ்த்துக்கள். பாடலாசிரியர் மோகன்ராஜன் என் ஃபேமிலி மாதிரி தான். அவருக்கு என் வாழ்த்துக்கள். அபியை இனி பிடிக்கவே முடியாது, முதல் படத்தை வெற்றிப்படமாக தந்து விடலாம் ஆனால் இப்படி ஒரு படத்தை பெரிய நடிகர்களை வைத்து செய்வது கடினம். அதை சாதித்த அபிக்கு வாழ்த்துக்கள். சிம்ரன் மாதிரியான ஃபெர்மாருக்கு இசையமைத்தது பெருமை. சசி என் அண்ணன் அவரது சினிமா பயணத்திற்கான சரியான அங்கீகாரமாக இப்படம் அமைந்துள்ளது. சினிமாவுக்கு நிலைத்து நிற்க நல்ல குணம் தான் முக்கியம் அதை அவரிடம் உணர்ந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் அபிஷன் ஜீவிந் பேசியதாவது…
முந்தைய நிகழ்வினில்., என் குழு அனைவருக்கும் நன்றி சொன்னேன். இப்போது பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். உங்கள் பாரட்டில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வந்துள்ளார்கள். என் ஃபேமிலியோடு படத்திற்கு போக எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை, இப்படத்தை வெற்றிப்படமாக்கி தந்த யுவராஜ் அண்ணா மகேஷ் அண்ணாவிற்கு நன்றி. சசி அண்ணா இந்தப்படத்தில் வருவது போல தான், உங்களுக்கே தெரியாது, நீங்கள் எனக்கு எவ்வளவு செய்துள்ளீர்கள் என்று, எல்லாவற்றிக்கும் நன்றி. சிம்ரன் மேம் உங்களுடன் வேலை பார்த்தது கனவு மாதிரி உள்ளது, இந்த வாய்ப்பைத் தந்ததுக்கு நன்றி. ஷான் ரோல்டன் அண்ணா எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி. என் குழு அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான்
இது ஒரு நன்றி சொல்லும் விழா. எங்களுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தந்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. எப்போதும் நல்ல கதைகளை ஜெயிக்க வைக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் அபிக்கு வாழ்த்துக்கள். என் தம்பி ஜெயித்தது போல் உள்ளது. சசி சார் தம்பி எனக்குப் பழக்கம், அவர் வீட்டுக்குப் போய் போட்டோ எடுத்து வந்துள்ளேன் ஆனால் அவரை வைத்து படமெடுப்பேன் என நினைக்கவில்லை. எங்கள் பேனரில் நடித்ததற்கு நன்றி. சிம்ரன் மேமுக்கு நான் மிகப்பெரிய ஃபேன், நான் படிக்கும் காலத்தில் ஷீட்டிங்கில் அவரைப் பார்க்க அலைந்துள்ளேன். அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. அற்புதமான இசையை தந்த ஷான் ரோல்டன் ஐயாவிற்கு நன்றி. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் மூலம் நல்ல படங்கள் தான் வருமென குட்நைட் பட விழாவில் சொல்லியிருந்தேன், அதே தான் இப்போதும் சொல்கிறேன். தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் நன்றி.

நடிகை சிம்ரன் பேசியதாவது…
எல்லோருக்கும் நன்றி. அபி கதை சொன்ன போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்றேன். அப்போதே மகேஷை மீட் செய்து இந்தப்படம் செய்கிறேன் என்று சொன்னேன். நான் பல வருடங்களாக இந்த துறையில் உள்ளேன். நீங்கள் தரும் ஆதரவு தான் இந்த வெற்றிக்கு காரணம், உங்களுக்கு நன்றி. சசிகுமார் சார் மிக அற்புதமான மனிதர். அற்புதமான இயக்குநர் அற்புதமான கோ ஸ்டார். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 20 வருடம் கழித்து மீண்டும் என்னை உருவாக்கியுள்ளார்கள். என் குழு அனைவருக்கும் நன்றி.

நடிகர் சசிகுமார் பேசியதாவது…,
பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் தந்த வெற்றி தான் இது. நீங்கள் சம்பளத்தை ஏத்தி விடுவீர்களா எனக்கேட்டீர்கள், கண்டிப்பாக ஏத்த மாட்டேன், இந்தப்படத்தை இந்த பட்ஜெட்டில் தான் எடுக்க வேண்டும், அப்போது தான் அது வெற்றி பெறும். இந்தப்படம் நிறையப்பேரின் கனவை நனவாக்கியுள்ளது, நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது. ஒரே மாதிரி படம் பண்ண வேணாம் டிஃபரண்ட் டிஃபரண்டா படம் பண்ணலாம், வேறு மாதிரி ஜானர் படம் பண்ணலாம் அப்படின்ற ஒரு நம்பிக்கையை, இந்த படம் கொடுத்திருக்கதான் நான் நினைக்கிறேன். ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்துகிட்டே இருக்காங்க. எனக்கு பல ஆண்டுகளுக்கு அப்புறம் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இது என்னோட வெற்றியா நான் நினைக்கவில்லை. இந்த படம் வெற்றிய வந்து ஒரு சசிகுமார் ஜெயிச்சுட்டான். ஒரு மில்லியன் டாலர் ஜெயிச்சிருச்சு அப்படின்னு நினைக்காதீங்க. புது தலைமுறை ஜெயித்துள்ளது. தோல்வி அடைஞ்ச இயக்குனர்களுக்கு இப்படம் நம்பிக்கை கொடுத்திருக்கிறது.

நாம் வெற்றி பெற, முதலில் நாம் நம்ம தோல்வியை ஒத்துக்கணும். நான் தோல்வி அடைஞ்சிருக்கேன். என் தோல்வியை ஒவ்வொரு தடவையும் நான் ஒத்துக்கிட்டேன். இந்த படம் முதல் நாள் கலெக்ஷன் என்ன என்பது உங்க எல்லாருக்கும் தெரியும். தயாரிப்பாளர்கள் எல்லா நடிகர்கள்கிட்டயும் உண்மைய சொல்லுங்க, எவ்வளவு ஓடி இருக்குன்னு சொல்லுங்க, ஏன் மறைக்கறீங்க… மறைக்காதீங்க எவ்வளவு ஓடி இருக்குன்னு சொன்னாதான் யாரும் சம்பளம் ஏத்த மாட்டாங்க.. அப்பதான் உண்மையா இருப்பாங்க… இந்தப்படம் முதல் நாளை விட இப்போது தான் அதிக வசூல்.

என்னுடைய ஹையஸ்ட் வசூல் சுந்தரபாண்டியனும் குட்டி புலியும்தான். அந்த குட்டி புலியும் சுந்தரபாண்டியனும் ஹையஸ்ட் கலெக்ஷன இந்த டூரிஸ்ட்ஃபேமிலி தாண்டியுள்ளது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிவரும் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வர வேண்டும் என்பதால் தான் இதைச் சொல்கிறேன். இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே யுவராஜ் ரொம்ப கான்ஃபிடென்ட்டா இருந்தார். என்னைவிட இப்படத்தின் மீது நம்பிக்கை வச்சது இந்த ப்ரொடியூசர்ஸ் ரெண்டு பேரும்தான் அவங்கதான் இது மேல ரொம்ப நம்பிக்கை வச்சாங்க.. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர் வந்து ரசிக்கிறார்கள். நல்ல படம் தந்தால் மக்கள் தியேட்டர் வர தயாராக உள்ளார்கள். இப்படத்தினை வெற்றிப்படமாக தந்த இயக்குநர் அபிக்கு வாழ்த்துக்கள். சிம்ரன் மேடமுக்கு நன்றி. இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சென்ற தயாரிப்பாளருக்கு நன்றிகள். அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது…
இப்படத்தை வெற்றிப்படமாக்கிய பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இந்தப்படத்தை ஒப்புக்கொண்ட சசி சாருக்கு நன்றி. நீங்கள் செய்த நல்லது தான் இந்த வெற்றிக்கு காரணம். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.