தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு ​: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

0
5

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு ​: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளுடனும், இதர மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமலில் உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு, நாளை மறுதினம் காலையுடன் முடிவடையும் நிலையில், புதிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி சில தளர்வுகளுடன் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

​தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஜூன் 7-ம் தேதி முதல் ஊரடங்கின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது நோய்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.

எனவே இந்த மாவட்டங்களில் நோய்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதே சமயம் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.

* காய்கறி, பழங்கள், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனை மட்டும் அனுமதிக்கப்படும்.

* அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இந்த 11 மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்:

*தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்குகள் காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மீன் சந்தைகள் மொத்தவிற்பனை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து அரசு அலுவலகங்களிலும் 30% பணியாளர் உடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை அனுமதிக்கப்படும்

* மின் பொருள்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டாக்ஸி ஓட்டுனர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

* நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறு இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கடைக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.