OTT-க்கு எதிரான பிரச்னை: சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய பாரதிராஜா

0
123

OTT-க்கு எதிரான பிரச்னை: சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய பாரதிராஜா

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சூரரைப்போற்று, சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

தற்போது இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘சமீப நாட்களில் ஓடிடிக்கு எதிரானப் பிரச்சினையை சூர்யாவுக்கு எதிரான தனி நபர் பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரிய விசயமாகும். இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள். திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒரு சிலரே அதில் சூர்யாவும் குறிப்பிடத்தகுந்தவர்.

சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் ஓடிடி-யில் வரக்கூடாது, திரையில் தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்க கூடிய ஒன்றுதான். அதேநேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில் கொண்டுவர முன் வருவீர்களா? போராடுவீர்களா? படைப்புகளிலும், தயாரிப்புகளிலும் தொழில்சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது.

என் நண்பர் சிவக்குமாரின் வளர்ப்பும், வாழ்வியல் முறையையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். சூர்யா, கார்த்தி இருவரும் என்வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள். அவர்களின் மனித நேயப்பண்பும், நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன். இவர்கள் தமிழ் திரைக்கு கிடைத்தபொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். பெருமைப்படுங்கள். இவர்களை மட்டுமில்லை எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். மனம்வலிக்கிறது.

இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம். தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால் தான், இதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே வாருங்கள் பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணதில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதாகும்.

சூர்யா மிரட்டியுள்ள சூரரைப்போற்று திரை முன்னோட்டம் பார்த்து வியந்தேன். இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் முத்திரைபதிக்கும் தமிழனைப் போற்றும்’ இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.