8 தொழில் நிறுவனங்கள் ரூ.10,399 கோடி முதலீடு: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

0
172

8 தொழில் நிறுவனங்கள் ரூ.10,399 கோடி முதலீடு: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (20–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 8 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை 10,399 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இத்திட்டங்களின் மூலம் சுமார் 13,507 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும் முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

மேலும், புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்தது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட ஏற்படுத்தப்பட்ட நாடுகளுக்கான அமைவுகள், அனுமதிகளை உடனுக்குடன் வழங்க ஒற்றைச் சாளர முறை, முதலமைச்சரின் தலைமையிலான உயர்நிலைக் குழு என பல வழிமுறைகள் ஏற்கனவே முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

தமிழகம் முதலிடம்

தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன் முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்திய இது போன்ற பல திட்டங்களின் விளைவாகவும், தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலின் விளைவாகவும் தொடர்ந்து பல புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மும்பையைச் சேர்ந்த, ப்ராஜெக்ட்ஸ் டுடே என்ற நிறுவனம், கோவிட் – 19 காலத்திலும், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், அகில இந்திய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலத்தினை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தினைப் பிடித்துள்ளது என்று தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

27.5.2020 அன்று, தொழில்துறை சார்பில், ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இத்திட்டங்களின் மூலம் சுமார் 47,150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

8 புதிய தொழில்கள்

அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் முன்னிலையில் இன்று 8 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தற்போது நிலவிவரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 8 திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இத்திட்டங்களின் விவரங்கள் பின் வருமாறு:-

1. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், விக்ரம் சோலார் நிறுவனம், 5,423 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 7,542 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சோலார் செல்ஸ் மற்றும் மோடுலஸ் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த சோலார் செல்ஸ் மற்றும் மோடுலஸ், இத்திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

தொழிற்பூங்கா

2. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிஜிடி சாத்ரைய் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், தொழிற்பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

3. கோயம்புத்தூர் மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அக்குவாசப் நிறுவனத்தின் டக்டைல் அயர்ன் பவுண்டரி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

4. இராணிப்பேட்டை மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், என்டிஆர் இன்ப்ராஸ்டெக்சர் நிறுவனம், 125 ஏக்கர் பரப்பளவில் அமைக்க உள்ள தொழிற் பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

5. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 36 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 465 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜிஎல் ஆக்ரோ டெக் நிறுவனத்தின் முந்திரி பதப்படுத்தும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

6. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் ஒரகடம் நெடுஞ்சாலையில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஹிரன்நந்தானி குழுமத்தை சேர்ந்த யோட்டா நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

7. கோயம்புத்தூர் மாவட்டத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஹேர் கம்பரசர்ஸ் உற்பத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்.

8. ஈரோடு மாவட்டம், சிப்காட் பெருந்துறை தொழிற்பூங்காவில், 40 கோடி ரூபாய் முதலீட்டில், ஜெஎஸ் ஆட்டோ காஸ்ட் நிறுவனத்தின் பவுண்டரி விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

என மொத்தம், 8 திட்டங்களின் மூலம் 10,399 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் சுமார் 13,507 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் மித்தல் மற்றும் செயல் இயக்குநர் மருத்துவர் எஸ். அனீஷ் சேகர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.