பள்ளிக்குச் செல்ல சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவி.. உதவிக்கரம் நீட்டிய திமுக MLA – நெகிழ வைத்த முதல்வர்!

0
101

பள்ளிக்குச் செல்ல சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவி.. உதவிக்கரம் நீட்டிய திமுக MLA – நெகிழ வைத்த முதல்வர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி – கருபாயி தம்பதி. இவர்களின் மூத்த மகளான சந்தியா கீழ்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த நிலையில், சந்தியாவின் தாயும் வெளிமாநிலத்தில் கூலி வேலைக்காக சென்றுள்ளார். இதனால் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்.

மாற்றுத்திறனாளியான சந்தியா பள்ளிக்கு செல்ல தனது கால் வலியைக் கூட பொருட்படுத்தாமல் இருப்பு வண்டியின் உதவியுடன் தள்ளிக்கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்ககோரி கோரிக்கை விடுத்து வெளியான சந்தியாவின் புகைப்படம் ஒன்று முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

இதனையடுத்து மாணவியின் கோரிக்கையை ஏற்று அடுத்த 24 மணிநேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாணவிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரியில் இயங்கக்கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் வழங்கினார். மேலும், மாணவியின் படிப்பிற்கு தேவையான நிதி உதவியையும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் வழங்கினார்.

அதுமட்டுல்லாது, மாற்றுத்திறனாளி மாணவி சந்தியாவிற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை ஆயிரத்திலிருந்து, ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கவும், அதைப்போல வருடாந்திர கல்வி உதவித் தொகை வழங்கவும், முதல்வரின் உத்தரவின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ தெரிவித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.