காற்றில் பறந்த உத்தரவு சமூக இடைவெளியை மறந்து காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டம்

0
120

காற்றில் பறந்த உத்தரவு சமூக இடைவெளியை மறந்து காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டம்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், காலை 3 மணி முதல் 8 மணி வரை மட்டுமே மீன் வியாபாரம் செய்யப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. அதனால் பொதுமக்கள் அதிகாலை முதலே மீன் வாங்குவதற்காக கூட்டம் கூட்டமாக வந்தனர்.

இதனால் பொதுமக்கள் கூட்டம் அந்த பகுதியில் அலைமோதியது. மேலும் சமூக இடைவெளி என்ற ஒன்றை மக்கள் அறவே மறந்து இருப்பதையும் காண முடிந்தது. பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுப்பட்டனர்.

அங்குள்ள காவலர்கள் ஒலிபெருக்கிகள் மூலம் மக்களைக் கலைந்து செல்லும்படியும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க சொல்லியும் அறிவுறுத்திய நிலையில் பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாமல் மீன் வாங்குவதிலேயே ஆர்வம் காட்டியதால் சமூக இடைவெளியே இல்லாமல் போனது.

மேலும் மீன் விற்பனை 3:00 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மீன் வியாபாரிகளை தவிர்த்து பொதுமக்கள் யாரும் உள்ளே வர கூடாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில், அதையும் தாண்டி மீன்பிடி துறைமுகத்தில் கூட்டம் கூடியிருந்தது.

மேலும் ஒரு நாளைக்கு 50 முதல் 70 விசைப்படகுகள் மட்டுமே மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.