‘முதல்வர் படைப்பகம்’ சென்னையின் அனைத்து பகுதிக்கும் விரிவுபடுத்தப்படும் – மேயர் பிரியா அறிவிப்பு!
கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்தில் மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம், போட்டித்தேர்வுகளுக்கு தயாரவதற்கு படிப்பதற்கான அரங்கம், நூலகம் போன்றவை அமைக்கப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதேபோல் துறைமுகம் மற்றும் சைதாப்பேட்டை தொகுதியிலும் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் இத்திட்டத்திற்கு முதல்வர் படைப்பகம் என்ற பெயரையே சூட்டவேண்டும் என சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் திரு.வி.க. நகர் மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் மற்றும் மாமன்ற உறுப்பினர் ராஜேஷ்வரி ஸ்ரீதர் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரம் உயர கட்டணமில்லா கணினிப் பயிற்சி மற்றும் தையல் பயிற்சிப் பள்ளி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பயிற்சிப் பள்ளிகள் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியிலும், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் அனைத்து மண்டலங்களிலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்