பூத் சிலிப் முதல் பதற்றமான வாக்குச்சாவடிகள் வரை… – தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

0
7

பூத் சிலிப் முதல் பதற்றமான வாக்குச்சாவடிகள் வரை… – தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழகத்திலுள்ள மொத்தம் 6,28,69,955 வாக்காளர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள், 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்கள் மற்றும் 7192 மூன்றாம் பாலினத்தவர். அனைவரும் வாக்களிக்கும் வகையில் 88,937 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
4,17,521 தேர்தல் பணியாளர்கள் நாளை பணியில் ஈடுபடவுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விவிபேட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ கிட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 88,937 வாக்குச்சாவடிகளில்ம் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.
இன்று மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கப்படும். அப்படி பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் உரிய ஆவணத்துடன் வாக்களிக்கலாம். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமான பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஊபர் செயலியில் கோரிக்கை விடுப்பதன்மூலம் 2 கிலோமீட்டருக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இலவச பயண வசதியை பெறலாம்.
வாக்குச்சாவடிகளில் எத்தனைபேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்புகொண்டு வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.
தமிழகத்தில் நேற்று மாலை 3 மணிவரை ரூ.428.46 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் சி விஜில் மூலம் அதிக தேர்தல் விதிமீறல் புகார்கள் வந்துள்ளன.
குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும்’’ என அவர் தெரிவித்தார்.