தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

0
8

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட உள்ளது. அமைச்சருக்கு நிகரான எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் யார் என முடிவு செய்யப்படாமலே திங்கட்கிழமைக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இன்று முதல் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவது கேள்விக்குறியானது.இந்நிலையில், அதிமுக தலைமை தரப்பில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் மாநகர காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணிக்கு அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைறெ்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழக எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரது தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.