ஜூன் 3ம் தேதிக்குள் அடுத்த தவணை 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
6

ஜூன் 3ம் தேதிக்குள் அடுத்த தவணை 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பபணிகள் , சிகிச்சை குறித்து ஆய்வு நடத்தி, மருத்துவத்துறையினருடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து மத்திய பேருந்து நிலையம் அருகே 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி), கொரோனா நோயாளிகளுக்கான, 500 படுக்கைகள் வசதி கொண்ட சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

முதலமைச்சரின் ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன், சுப்ரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பிக்கள் திருநாவுக்கரசர், திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, என்.ஐ.டி வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகான முதல் செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெறுவதில் மகிழ்ச்சி. திமுகவிற்கு பெரும்பான்மை வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றிச் செய்தி வந்த போதும் கொரோனா பரவலைத் தடுப்பது குறித்தே ஆலோசித்தேன். வெற்றிப் பெற்றதை விட, ஆட்சியமைத்ததை விட கொரோனா தொற்று இல்லாத நாளே எங்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான உற்பத்தி தொடங்கும்.
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து நிபுணர் குழு, அனைத்துக் கட்சி உறுப்பினர் குழு கூட்டம் நாளை (இன்று) நடைபெறுகிறது.

அதில் ஊரடங்கு குறித்தும், ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 25 கோடி மருந்துகள் வாங்கவும், ரூ. 25 கோடி ரூபாய் திரவ ஆக்ஸிஜன் வாங்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 34,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஊரடங்கால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை விட சிறிய மாநிலங்களில் கூட, நாளொன்றுக்கு, கொரோனா தொற்று, 50 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொரோனா தடுப்பு எனும் சவாலான பணியில் ஈடுபட்டுள்ளோம். போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது.

ஆட்சி அமைத்து, 2 வாரத்தில், 16, 938 படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேர பொது முடக்கம் இருந்தால்தான் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து நிபுணர்கள் குழு, அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

வரும் ஜூன், 3ம் தேதிக்குள், அடுத்த தவணை, 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் வழங்கப்படும்” என்றார்.

மேலும், “அரசு ஆசிரியர்கள் சம்பளம், 50 சதவீதமாக குறைக்கப்படுவதாக ஒரு செய்தி பகிரப்படுகிறப்படுகிறதே?” என்ற கேள்விக்கு, “வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை” என்று பதிலளித்தார்.

முதலமைச்சர் பேட்டியின் போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியபோது “தமிழ்நாட்டில் தற்போது வரை, 9 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன” என்றார்.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், “திருச்சி பெல் மற்றும் ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலைகளில் விரைவில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கும். அதற்கான டெண்டர் இன்று விடப்பட்டுள்ளது. இன்னும் நாற்பது நாட்களில் ஆக்ஸிஜன் கிடைக்கும் என்று பெல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்றார்.

மேலும், ஆய்வின் போது, என்.ஐ.டி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவ காட்சியரங்கை பார்வையிட்டார். அரசு சித்த மருத்துவ அலுவலர் காமராஜிடம் விபரம் கேட்டறிந்தார். அப்போது சித்த மருத்துவத்துறையினர்கொடுத்த மூலிகை பானத்தை முதலமைச்சர் அருந்தினார்.